நைஜீரியாவின் வடகிழக்கை 'தனிநாடாக' அறிவித்தது போகோ ஹாரம் இயக்கம்!!
க்வோஸா: நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியை தனிநாடாக போகோ ஹாரம் தீவிரவாத இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
நைஜிரீயாவில் போகோ ஹாரம் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள பல கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி வந்தனர். கடந்த 2 மாதங்களாக வடகிழக்கு பகுதியில் உள்ள நகரங்களையும் கிராமங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் போகோ ஹாரம் கிளர்ச்சியாளர்கள்.

இந்த நிலையில் க்வோஸா என்ற முக்கிய நகரம் ஒன்றையும் போகோ ஹாரம் இயக்கத்தினர் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து தங்கள் வசம் உள்ள பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தனி இஸ்லாமிய நாடாக (கலிபாத்) போகோ ஹாரம் இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இது குறித்த வீடியோ பதிவு ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் போகோ ஹாரம் கிளர்ச்சி அமைப்பின் தலைவர் அபு பக்கர் ஷேக், க்வோஸா நகரை வென்று தந்த அல்லாஹ்வுக்கு நன்றி. க்வோஸா தொடர்பாக நைஜீரியா இனி கவலையடைய தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
ஆனால் போகோ ஹாரம் இயக்கத்தின் இந்த தனிநாட்டுப் பிரகடனத்தை நைஜீரிய அரசு நிராகரித்துள்ளது. ஏற்கெனவே ஈராக் மற்றும் சிரியாவில் சன்னி முஸ்லிம்களின் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து 'இஸ்லாமிய தேசம்' என்ற நாட்டை பிரகடனப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications