ஈராக்கில் ட்விட்டர் மூலம் பிரச்சாரம், ஆட்சேர்ப்பு செய்யும் தீவிரவாதிகள்
பாக்தாத்: ஈராக்கில் புனிதப் போரில் கலந்து கொள்ள புதிய நபர்களை தேர்வு செய்யவும், பிரச்சாரத்தை பரப்பவும் தீவிரவாதிகள் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஈராக்கில் ஷியா பிரிவினரின் தலைமையிலான அரசுக்கு எதிராக 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அன்ட் சிரியா'(ஐ.எஸ்.ஐ.எஸ்) என்ற தீவிரவாத அமைப்பு கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் கார் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பலுஜா நகரை கைப்பற்றிய இந்த அமைப்பு தற்போது மொசுல் நகரை கைப்பற்றியுள்ளது.
இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மக்களை கொலை செய்து அந்த படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறது. மேலும் தங்களின் புனிதப் போரில் கலந்து கொள்ள புதிய ஆட்களை ட்விட்டர் மூலம் தேர்வு செய்கிறது.
இதற்காக அந்த அமைப்பு ஆன்ட்ராய்ட் ஃபோன்களுக்கென தி டான் ஆஃப் கிளாட் டைடிங்ஸ்(The Dawn of Glad Tidings) என்ற ட்விட்டர் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது. இந்த ட்விட்டர் அப்ளிகேஷன் மூலம் ஐ.எஸ்.ஐ.ஸ். பற்றிய தகவல்கள், செய்திகளை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவோர்களின் ட்விட்டர் கணக்கு மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். தனது தகவல்களை பிற ட்விட்டர் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பும். கடந்த வாரத்தில் ஒரே நாளில் 40 ஆயிரம் ட்வீட்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அனுப்பியுள்ளது. அதன் ட்வீட்களை பலர் ரீட்வீட் செய்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். ட்விட்டர் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த பிரச்சாரத்தை பார்த்த ட்விட்டர் நிர்வாகம் அந்த அமைப்புடன் தொடர்புடைய கணக்குகள் பலவற்றை கடந்த வாரம் முடக்கியது.
இதற்கிடையே ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த ஈராக் அரசு தடை விதித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு ஆதரவான அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.