தாயில்லாமல் நாம் இல்லை...: துபாயில் 'தாய்மை' இதழ் வெளியீடு
துபாய்: வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேர் சார்பில் 87வது இதழாக "தாய்மை" சிறப்பிதழ் வெளியீடு, கவியரங்கம் மற்றும் மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சி 20.03.2015 அன்று காலை 11 மணிக்கு துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.

கடந்த ஆண்டைப் போலவே அகில உலக மகளிர் தினத்தை தமிழ்த்தேர் முற்றிலும் மகளிர் நடத்திய விழாவாக நடத்தியது. சிறப்பு விருந்தினர்களாக விருது பெற்ற எழுத்தாளர் நிருபர் சபரி, இந்தியன் பள்ளிக்கல்வி இயக்குனர் திருமதி.மாலதி ரங்கராஜன் மற்றும் மோஹனா இசைக் குழுமத்தின் இயக்குனர் திருமதி. ராதிகா ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
செல்வி ஸ்ருதி மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர்தம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை கவிதாயினி ரமா மலர்வண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியை கவிதாயினி ஸ்வேதா கோபால் அழகுறத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு திருமதி. மீனாகுமாரி பத்மநாதன் அவர்கள் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார்.

திருமதி.நர்கிஸ் பானு மற்றும் செல்வி ஆனிஷா தலைமை ஏற்று தாய்மை எனும் தலைப்பில் கவியரங்கம் நடத்தினர். கவியரங்கத்தில் யமுனாலிங்கம், அதிரை கலாம், அதிரை மெய்சா, பி.கே.நாகினி, காவிரிமைந்தன், ஜியாவுதீன், ஜெயராமன் ஆனந்தி, ரமா மலர்வண்ணன், ஸ்வேதா கோபால், உமா பாலாஜி, ஆனந்த், பி.வி.கோவிந்தராஜன், பிரியா கதிர்வேல், கிருஷ்ராமதாஸ், முகவை காளிதாஸ், மீனாகுமாரி பத்மநாதன் ஆகியோர் கவிதை வழங்கினர்.
தாய்மை தலைப்பில் தலைப்புரையாக சிறப்புரை ஆற்றினார் கவிஞர் சசிகுமார் அவர்கள். நிகழ்ச்சியில் சிறப்பு சேர்க்க, பேச்சரங்கம் நடைபெற்றது. திருமதி. உமா பாலாஜி நடத்திய இந்நிகழ்ச்சியில் வாழ்க்கையில் எந்த ஒரு சூழலை எவ்வாறு எதிர்கொள்வீர்கள் என்கிற வினாவிற்கு அவரவர் தந்த விடைகள் அனைவரின் பாராட்டுதலைப் பெற்றது.
எழுத, படிக்க, பேச தாய் மொழி அறிந்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழுக்காகச் சிறப்பாக செயலாற்றி வரும் தமிழ்த்தேரை மனதாரப் பாராட்டுவதாக தெரிவித்தார் மாலதி ரங்கராஜன். முடியும் என்கிற தன்னம்பிக்கை தான் நம் வெற்றிகளுக்கு அடித்தளம் என்றும், முடியாது என்கிற எண்ணத்தை விட்டொழித்து வாழ்க்கையில் வெற்றிகள் குவிக்க புறப்படுங்கள் என்றார்.

அடுத்து பேசிய திருமதி ராதிகா ஆனந்த், இசைத்தமிழ்ப் பற்றி எடுத்துரைத்ததோடு பாரதி பாடல்கள் முதலியவற்றை தன் இனிமையான குரலில் பாடி மகிழ்வித்தார். . குறிப்பாக தில்லானா மோகனாம்பாள் புகழ் பத்மஸ்ரீ கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டது பெறற்கரிய பேறு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயியான கவிஞர் தமிழோவியன் எழுதிய விடியலை நோக்கி என்னும் கவிதைநூல் வெளியிடப்பட்டது. திருமதி. மாலதி ரங்கராஜன் வெளியிட கவிஞர் யமுனாலிங்கம் முதல்பிரதியை பெற்றுக் கொண்டார். திருமதி. ராதிகா ஆனந்த் வெளியிட ஹெல்த் கணேசன் இரண்டாம் பிரதியைப் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை திரு.வி. களத்தூர் பாஷா அவர்கள் வெளியிட திரு. ஆனந்த் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தமிழ்த்தேர் இலக்கிய இதழின் 87வது சிறப்பிதழாக 'தாய்மை' இதழ் வெளியிடப்பட்டது. திருமதி. மாலதி ரங்கராஜன் வெளியிட திருமதி. பிரியா கதிர்வேல் முதல்பிரதியை பெற்றுக்கொண்டார். திருமதி. ராதிகா ஆனந்த் வெளியிட திருமதி. வித்யா இரண்டாம் பிரதியைப் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை திரு.வி. களத்தூர் பாஷா அவர்கள் வெளியிட திரு.சையத் உமர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
திருமதி. மாலதி ரங்கராஜன் அவர்களுக்கு திருமதி. ஷோபா கணேசன் அவர்கள் பொன்னாடை போர்த்தினார். நினைவுப்பரிசினை கவிஞர் காவிரிமைந்தன் வழங்கினார். கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் சார்பில் நினைவுப்பரிசினை கவிஞர் தஞ்சாவூரான் வழங்கினார்.
திருமதி. ராதிகா ஆனந்த் அவர்களுக்கு திருமதி. பி.கே. நாகினி அவர்கள் பொன்னாடை போர்த்தினார். நினைவுப்பரிசினை கவிஞர் ஜியாவுதீன் வழங்கினார். திரு.வி.களத்தூர் பாஷா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார் அதிரை கலாம் அவர்கள். விழாவில் பலகுரல் நிகழ்ச்சி நடத்தி அனைவரையும் சிரிக்கவும் பாராட்டவும் வைத்தார் செல்வன். அரவிந்த் பாரதி சசிகுமார். சிறுமி அவிஷா தாய்மை என்னும் தலைப்பில் இனிமையான குரலில் தெளிவாக உரையாற்றி அனைவரின் இதயங்களையும் வென்றார்.
இலங்கையிலிருந்து வெளியாகும் தடாகம் இதழில் சிறப்புப் பரிசு பெற்ற தமிழ்த்தேர் உறுப்பினர் திருமதி நாகினி அவர்களுக்கு பொன்னாடையும் சிறப்புப் பரிசும் அளித்து கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்த்தேருக்கு ஆதரவு அளித்துவரும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அடுத்த மாதம் தமிழ்த்தேர் தனது 10வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கிறது என்கிற அறிவிப்பையும் 17.04.2015ல் இரட்டைக் கவியரங்க நிகழ்ச்சியாக "முதல் கவிதை" மற்றும் "மறக்க முடியவில்லை" என்கிற தலைப்புகளில் நடக்கவிருப்பதையும் தெரிவித்து நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ரமா மலர்வண்ணன்.
சிவ ஸ்டார் கோவிந்தராஜன், காவிரிமைந்தன், ஜியாவுதீன், லக்ஷ்மி நாராயணன், முதுவை ஹிதாயதுல்லா, குளச்சல் இப்ராஹிம், யமுனாலிங்கம் மற்றும் ஹெல்த் கணேசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications