பிரதமர் பதவி விலகக் கோரி தலைநகரை மூடும் போராட்டம்: தாய்லாந்தில் ராணுவ புரட்சி அபாயம்
பாங்காக்: தாய்லாந்து பிரதமர் பதவி விலகக் கோரி, தலைநகர் பாங்காக்கை மூடும் போராட்டத்தை அறிவித்துள்ளனர் அந்நாட்டு எதிர்க்கட்சியினர். இதனால், அங்கு ராணுவப் புரட்சி உருவாகும் நிலை உருவாகியுள்ளது.
தாய்லாந்துப் பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா பதவி விலகக் கூறி, எதிர்க் கட்சியினர் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நெருக்கடி முற்றியதால் தனது அரசை கலைத்த யிங்லக் ஷினாவத்ரா வருகிற பிரப்ரவரி 2-ந் தேதி நாடாளு மன்ற தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
ஆனால், தொடர்ந்து அவரது தலைமையிலான காபந்து அரசு பதவியில் உள்ளது. எனவே, யிங்லக் பிரதமர் பதவியில் இருந்து விலக வலியறுத்தி தலைநகர் பாங்காக்கில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
போராட்டத்தை அடக்க முயன்ற போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல்கள் வெடிக்கின்றன. மேலும் போலீஸ் உயர் அதிகாரிகள் குடியிருப்புகளுக்கான தண்ணீர் மற்றும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. அரசு அலுவலக கட்டிடங்கள் கைப்பற்றப்பட்டன.
சமீபத்திய போராட்டங்களின் போது நடைபெற்ற மோதல்களில் 8 பேர் பலியாகி உள்ளனர். இருந்தும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,0 தலைநகர் பாங்காக்கை தற்காலிகமாக மூடும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி முக்கிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் ரோடுகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோன்று ரயில் மற்றும் படகு போக்குவரத்தையும் நிறுத்த போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். இதனால் அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறும் வாய்ப்பு உள்ளது. அதை பயன்படுத்தி ராணுவ புரட்சி ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
ஆனால் போராட்டத்தை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக துணை பிரதமர் சுராபாங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணிக்காக பாங்காக்கை சுற்றி 12 ஆயிரம் போலீஸ் மற்றும் 8 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications