நரசுஸ் காபி போரடிச்சிருச்சா... யானை சாணி “காபி” சாப்டலாமா?- கிளம்புங்க தாய்லாந்துக்கு!
பாங்காங்: காபி என்றாலே நமக்கெல்லாம் நியாபகம் வருவது வாசனை நிறைந்த காபி கொட்டைதான்.
ஆனால், சிங்கப்பூர், தாய்லாந்தில் தற்போதைய டிரெண்ட் யானை போடும் சாணியில் உள்ள காபிக் கொட்டைகளை அரைத்து காபித்தூள் செய்து காபி போடுவதுதானாம்.
கேட்டாலே உவ்வே என்று வாந்தி வரவழைத்தாலும், சாதாரண காபித்தூளைவிட இந்த வகை காபித்தூளில் மணமும், சுவையும் தூள் கிளப்புகின்றதாம்.
அதிகரிக்கும் வரவேற்பு:
யானைகளின் வயிற்றில் செரிமானம் ஆகி சாணத்தில் கலந்து வெளியேறும் காபி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் சூடான காபி பானத்துக்கு தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் மிகபெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
காபி பழங்களும் மெனுவில்:
இதற்காக என்றே தாய்லாந்தில் யானைகளை வாங்கி வளர்த்து, அவற்றுக்கு அன்றாட உணவாக அளிக்கும் வாழைப்பழம், அரிசி சாதம், ஆகியவற்றுடன் காபி பழங்களையும் சேர்த்து அளிக்கின்றனர்.
17 மணி நேரம் ”வெயிட் ப்ளீஸ்”:
சுமார் 17 மணிநேர செரிமான சுழற்சிக்கு பிறகு யானைகள் சாணமிடும்போது, அதில் இருந்து இந்த காபி கொட்டைகளை பொறுக்கி சேகரிக்கும் பணியில் யானைப் பாகன்களின் மனைவியர் ஈடுபடுகின்றனர்.
பிளாக் ஐவரி காபி:
யானைகளின் உணவினூடே இந்த காபி கொட்டைகளும், அவற்றின் குடலில் சுரக்கும் ஒருவகை செரிமான திரவத்தில் பல மணி நேரம் ஊறி, பதப்படுத்தப்படுவதால், இந்த காபி கொட்டைகளில் உள்ள கசப்பு சுவை நீங்குவதுடன், ஒரு புது நறுமணமும், அருஞ்சுவையும் கிடைப்பதாக "பிளாக் ஐவரி" என பெயரிடப்பட்டுள்ள இந்த காபி கொட்டையின் தயாரிப்பாளரான தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டு எல்லைப்பகுதியில் வாழும் பிளேக் டின்கின் கூறுகிறார்.
33 கிலோவாம் ஹப்பா:
இப்படி, சுமார் ஒரு கிலோ ருசிமிக்க காபி கொட்டையை சேகரிக்க யானையின் வாயில் 33 கிலோ காபி பழங்களை திணிக்க வேண்டியுள்ளது. சில வேளைகளில் நீர்நிலைகளில் குளிக்கும்போதே யானைகள் சாணம் போட்டு விட்டால் எதுவுமே தேறாது.
கண்ணைக் கட்டும் விலை:
இதனால், இந்த காபி கொட்டை ஒரு கிலோ ஆயிரத்து 800 அமெரிக்க டாலர்களுக்கும் அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய்க்கும், ஒரு கப் எக்ஸ்பிரஸோ காபி 13 டாலர்களுக்கும் அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் 900 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
ஸ்டார் ஹோட்டல்களின் ஸ்டார்:
இந்த "பிளாக் ஐவரி" காபி தற்போது மாஸ்கோ, ஜுரிச், பாரிஸ், கோபன்ஹாகன் உள்ளிட்ட பெருந்கரங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றது.
நல்ல வேளை இது இந்தியாவில் இல்லைடா சாமி!!!