பாகிஸ்தான் அரசியலில் திருப்பம்.. இம்ரான் கானின் 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! கோர்ட் உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இம்ரான்கான் சிறை தண்டனை விவகாரத்தில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, இம்ரான் கான், அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பிரதமராக பதவி வகித்து வந்தபோது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பின்னர் அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் முக்கியமானதுதான் தோஷகானா வழக்கு. அதாவது, இவர் பிரதமாக இருந்த காலத்தில் இவருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் அரசின் தோஷகானா எனும் கஜானாவில் சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால், இம்ரான் கான் இதனை கஜனாவில் சேர்க்காமல் சட்டவிரோதமாக விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை தனது சொந்த நோக்கங்களுக்காக செலவு செய்திருக்கிறார். கோடிக்கணக்கில் இப்படியாக பணம் ஊழல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே இதை எதிர்த்து அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இம்ரான் கானுக்கு எதிராக புகார் அளித்ததிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது இம்ரான் கான் சிறையில் இருக்கிறார்.
இந்த சிறை தண்டனை காரணமாக அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, தோஷகானா வழக்கில் இவருக்கும், இவரது மனைவிக்கும் வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை நீதிபதி நீதிபதி அமீர் ஃபரூக் நிறுத்தி வைத்திருக்கிறார். தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு ரம்ஜான் விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் அந்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் வேட்பாளர்கள் அதிக இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications