கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கியது லிபரல் கட்சி... ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது
சிட்னி: கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி முன்னிலை பெற்றுள்ள லிபரல் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
ஆஸ்திரேலியாவில் 151 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியே வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

ஆனால் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி 70 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. தொழிலாளர் கட்சி 63 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் ஸ்காட் மோரிசன் தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது பிரதமருக்கான போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். இந்தநிலையில், ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் ஸ்காட் மோரிசன் தேர்வாகிறார்.
ஒருவேளை, தற்போதைய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றிருந்தால், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் தொழிலாளர் இயக்கத் தலைவருமான பில் ஷார்டன் (Bill Shorten) ஆஸ்திரேலியப் பிரதமராக வந்திருப்பார் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications