'எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்..' அமெரிக்கா மீது சீறிய வட கொரிய அதிபரின் சகோதரி..பகிரங்க வார்னிங்
வடகொரியா தயாரித்துள்ள ஏவுகணைகள் 14 ஆயிரம் கி.மீ வரை அசால்ட்டாக கடந்து சென்று தாக்கும்.
பியோங்யாங்: வடகொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்த நிலையில், தற்போது குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கும் வகையை சேர்ந்த சிறிய ராக்கெட்டுகளையும் சோதனை செய்து பார்த்திருக்கிறது. இந்த சோதனைகள் குறித்து அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சர்வதேச அளவில் அமெரிக்கா என்னதான் பலமிக்க நாடாக இருந்தாலும், அதனை வடகொரியா அசலாட்டாக எதிர்த்து வருகிறது. இதற்கு காரணம் வடகொரியாவிடம் இருக்கும் ஆயுதங்கள்தான். அமெரிக்காவிடம் இல்லாத ஆயுதங்களை கூட வடகொரியா தயாரித்து பரிசோதித்து வருகிறது. வடகொரியாவுக்கு அருகில் உள்ள தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் அமெரிக்காவின் நண்பர்கள். எனவே தன்னுடைய ஆயுதங்களை அமெரிக்கா இங்கு வைத்து வடகொரியாவை தாக்கலாம்.
ஆனால் வடகொரியாவுக்கு அமெரிக்காவை எதிர்க்க இப்படி எந்த ஆஃப்ஷனும் கிடையாது. எனவே நேரடியாக தங்கள் நாட்டிலிருந்தே அமெரிக்காவை தாக்கி அழிக்கும் வகையில் ஏவுகணையை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான ராணுவம் தயாரித்து வருகிறது. இங்கிருந்து அமெரிக்காவுக்கு 10,343 கி.மீ தொலைவு இருக்கிறது. ஆனால் வடகொரியா தயாரித்துள்ள ஏவுகணைகள் 14 ஆயிரம் கி.மீ வரை அசால்ட்டாக கடந்து செல்லும். ஆக இப்படியாக சக்தி வாய்ந்த ஆயுதங்களை வடகொரியா உற்பத்தி செய்து பரிசோதனை செய்து வருகிறது.

தென்கொரியா + அமெரிக்கா
கடந்த ஆண்டு தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கடற்படை மற்றும் விமானப்படை போர் பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா பரிசோதித்து பார்த்தது. இப்படி தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து பயிற்சியில் ஈடுபடும்போதெல்லாம் வடகொரியா ஏவுகணையை ஏவ தொடங்கிவிடும். இப்படி 90க்கும் அதிகமான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்திருக்கிறது. அந்நாட்டு வரலாற்றில் இதுவரை நடைபெற்ற சோதனையில் கடந்த ஆண்டு நடந்த சோதனையின் எண்ணிக்கைதான் மிக அதிகம்.

இந்த ஆண்டு
இந்த வரிசையில் கடந்த சனிக்கிழமை(பிப்.18) அமெரிக்கா-தென்கொரியா விமானப்படை கூட்டு பயிற்சி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வடகொரியா ஏவியது. இது வழக்கமான விஷயம்தானே என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தபோது அந்த சம்பவம் நடந்தது. அதாவது இப்படி ஏவப்பட்ட ஏவுகணை ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளது. இது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறிய ராக்கெட்டுகளையும் வடகொரியா பரிசோதித்துள்ளது.

தென்கொரியாவுக்கும் எச்சரிக்கை
600 மிமீ மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் ஏவப்பட்ட இந்த ராக்கெட்டுகள் கிழக்கு கடலில் விழுந்துள்ளது. கிழக்கு கடல் என்றால் ஜப்பான் கடல் என அர்த்தம். இந்த ராக்கெட்டுகளில் ஒன்று 395கி.மீ மற்றொன்று 337 கி.மீ தொலைவு இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாகும். இது குறித்து விளக்கமளித்த ஜப்பான், "வடகொரியா தனது ஆயுதங்கள் மூலம் அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இரு தினங்களுக்கு முன் ஏவப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்காவை தாக்கும் வல்லமை கொண்டவை. தற்போது ஏவப்பட்டுள்ள ராக்கெட்டுகள் தென்கொரியாவின் ஆயுத கிடங்குகளை முற்றிலுமாக தாக்கி அழிக்கக்கூடியவையாகும்" என்று கூறியுள்ளது.

பசிபிக் கடல்
இந்த பஞ்சாயத்து ஒருபுறம் இருக்கையில் மறுபுறம், "பசிபிக் கடலில் நாங்கள் குண்டுகளை வீசி பரிசோதனை செய்து வருகிறோம். இதுகுறித்து பலரும் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்க படைகளின் தன்மையை பொறுத்துதான் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன" என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி, கிம் யோ ஜாங் கூறியுள்ளார். அதாவது அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் தனது படைகளை குவிக்க கூடாது, தென்கொரியாவுடன் சேர்ந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள கூடாது என்பதுதான் வடகொரியாவின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications