அணுவை தொட்டார்கள்.. அவ்வளவுதான்! ரஷ்யாவிற்கு எதிராக "டைகர் டீமை" களமிறக்கிய அமெரிக்கா! பெரிய பிளான்
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத போர் தொடுக்குமா என்பதை கண்காணிக்க அமெரிக்கா சார்பாக டைகர் டீம் என்ற குழு அமைக்கப்பட்டு உள்ளதாம்.
Recommended Video
உக்ரைன் போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. ஏனென்றால் போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்யா தனது அணு ஆயுத படையை வைத்து சிறப்பு பயிற்சி எடுத்தது. அதேபோல் அணு ஆயுத பலம் கொண்ட ஏவுகணைகளை வைத்து சோதனையும் செய்தது.
இதனால் உக்ரைன் போரில் எங்கே ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமோ என்ற அச்சம் உள்ளது. இது போக சமீபத்தில் உக்ரைனில் தேவைப்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யா போர்
ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இது தொடர்பாக அளித்துள்ள பதிலில், எங்கள் நாட்டிற்கு என்று ஒரு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், எங்களின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம். எங்களின் கொள்கைப்படி அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம், என்று அவர் குறிப்பிட்டார். மேலும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அங்கு இருக்கும் மக்களை தாக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை, என்று குறிப்பிட்டார்.

அமெரிக்கா டாஸ் போர்ஸ்
இந்த நிலையில் உக்ரைன் போர் தொடங்கிய பின் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்க படைகள் புதிய டாஸ்க் போர்ஸ் ஒன்றை உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதலை கண்காணிக்கும் வகையிலும், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் டாஸ்க் போர்ஸ் ஒன்றை அமெரிக்கா உருவாக்கி உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குழுவிற்கு பெயர் டைகர் டீம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டைகர் டீம்
இந்த டைகர் டீம் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை கண்காணித்து வருகிறதாம். ரஷ்யா ஒருவேளை அணு ஆயுத தாக்குதலை நடத்தினால் என்ன செய்வது. அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது போன்ற ஆலோசனைகளை இந்த குழு மேற்கொண்டு இருக்கிறதாம். அதோடு உக்ரைன் மட்டுமின்றி மற்ற அண்டை நாடுகளுக்கு ரஷ்யா போரை விரிவுபடுத்தினால் என்ன செய்வது என்றும் இந்த குழு வாரம் மூன்று முறை சந்தித்து ஆலோசனை செய்து வருவதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

செய்வாரா?
புடின் இந்த போரில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவாரா என்ற சந்தேகம், குழப்பம் இவர்களுக்கும் உள்ளது. இவர்கள் வெளியிட்டுள்ள கருத்தில், புடின் இரண்டு மனநிலையில் இருப்பதாக தெரிகிறது. போர் ஒருவேளை கைவிட்டு போகும் பட்சத்தில் அவர் அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம். சிறிய அளவிலான அணு ஆயுதங்களை புடின் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்று அந்த குழு கருதுகிறது. ஆனால் இதற்கு அமெரிக்கா எப்படி பதில் அளிக்கும் என்பது மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

4 வாய்ப்புகள்
இந்த போர் செல்ல செல்ல புடின் 4 விதமான முடிவுகளில் ஒன்றை எடுக்க வாய்ப்புள்ளதாக அந்த குழு எச்சரிக்கை விடுத்துள்ளதாம். அதன்படி, 1. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிப்பது. 2. தாக்குதலை தீவிரப்படுத்தி, உக்ரைனுக்கு கடும் சேதம் ஏற்படுத்துவது. 3. கெமிக்கல் தாக்குதல், சைபர் தாக்குதல் போன்ற வேறு விதமான தாக்குதல்களை நடத்துவது. 4. போரை முடிக்கும் வகையில் சிறிய அளவிலான அணு ஆயுதங்களை பயன்படுத்துவது, ஆகிய 4 முடிவுகளை புடின் எடுக்க வாய்ப்புள்ளதாக இந்த குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications