ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு.. கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை.. ஊரடங்கால் சாதித்த போர்ச்சுகல்!
லிஸ்பன்: கடுமையான ஊரடங்கு விதிகள் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் போர்ச்சுகலில் கொரோனாவுக்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகல் நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ஜனவரி மாத இறுதியில் போர்ச்சுகல் உலகின் மிக மோசமான பாதிப்புகளை எட்டியது.
இதனால் கொடிய கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர போர்ச்சுகல் முழு ஊரடங்கு என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஊரடங்கின் மூலம் நல்ல பலன்களை அறுவடை செய்துள்ளது போர்ச்சுகல். அதாவது கடந்த 24 மணி நேரத்தில் போர்ச்சுகலில் கொரோனாவுக்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

போர்ச்சுகலில் 2-வது முறையாக கொரோனாவுக்கு இறப்புகள் ஏற்படவில்லை. கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தினசரி இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று அந்த நாடு அறிவித்து இருந்தது. போர்ச்சுகல் இதுவரை மொத்தம் 16,965 உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது. இதுவரை 8,34,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் போர்ச்சுகலில் போடப்பட்டுள்ள ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளிகள் , அருங்காட்சியகங்கள், உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ' நாடு தற்போது 'பசுமை' மண்டலத்தில் உள்ளது. கொரோனா பரவல் விகிதம் மக்கள்தொகை அளவோடு ஒப்பிடும்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகக் குறைவாக உள்ளது'' என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications