சொத்துக்களை விற்று, வங்கிக் கடன் வாங்கி ஐஎஸ்ஐஎஸ் சேர முயன்ற இளைஞர்கள்... மலேசியாவில்!
கோலாலம்பூர்: சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட மலேசியாவிலிருந்து செல்லும் சிலர் அதற்காக வங்கிக் கடன் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, சமீபத்தில் சிரியா செல்ல முற்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அனுதாபிகள் 5 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மடக்கப்பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேரும் நோக்கில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, தனது பயணச் செலவிற்காக வங்கியில் கடன் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிரியா செல்வதற்காக வங்கியில் கடன் பெற்றதோடு, அவர்கள் தங்களது சொத்துக்களை விற்றுள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
வங்கியில் ரூ. 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வங்கி கடன் வாங்கியுள்ள அந்நபர்கள் தங்களது பயணத் திட்டத்தில் சிரியா, ஈராக் மட்டுமல்லாது இந்தியா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டிருந்ததாக தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக மலேசிய போலீசார் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும், உரிய காரணம் இல்லாமல் வங்கிக் கடன் கேட்பதாக சந்தேகம் எழும் நபர்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதியுதவி செய்யக்கூடும் என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய நபர்களுக்கு 'லோன்' வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்று வங்கிக் கடன் வாங்கும் போக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பே துவங்கி இருக்கவேண்டும் என சந்தேகம் தெரிவித்துள்ள அந்த அதிகாரி, ஏற்கனவே சிரியா மற்றும் ஈராக் சென்று ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த பலர் இதுபோன்று வங்கிக் கடன் வாங்கி சென்றிருக்கக் கூடும் என்று தாங்கள் கருதுவதாக கூறியுள்ளார்.