துபாயில் தமிழ் வளர்க்கும் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடம்
துபாய்: துபாயில் தமிழ் வளர்க்கும் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்ற தமிழ்மொழிக்கேற்ப, தமிழர்கள் காலம் காலமாய் வெளிநாடு சென்று வாழ்க்கையை கழித்து வருகிறார்கள்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் மொழியும், கலாச்சாரமும் தொய்ந்து போய் விடாமல் இருக்கவும், தமிழ் மொழி வளர்வதற்கும் பாடுபட்டு வருகிறார்கள். பிற தேசங்களில் வாழ்ந்தாலும் அடுத்த சந்ததிகளாகிய தம் குழந்தைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கும் தமிழ் மொழியை கற்றுத் தருகிறார்கள்.

அந்த வகையில் துபாயில் செயல்பட்டு வரும் ‘எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடம்' என்ற குழு அரபு தேசத்தில் தமிழை அடுத்த தலைமுறையிடம் நிலைப்படுத்த முயன்று வருகிறது. தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடம் கற்றுத் தருகிறது. நாகப்பன் தலைமையில் இக்குழு சிறப்பாக செயல்பட்டு கலிபோர்னியா தமிழ் அகாடமியில் பாடத்திட்டங்களைப் பெற்று உலக தரத்தில் செயல்பட்டு வருகிறது.
சுமார் 10 ஆசிரியர்களைக் கொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சேவை மனப்பான்மையோடு அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட மாநிலங்களில் இப்பணியை செவ்வனே செய்து வருகிறது. அமீரகத்தில் கடந்த 12 வருடங்களாக மருத்துவப் பணி செய்துவரும் அறுவை சிகிச்சை நிபுணர் சிவராமன் லட்சுமணன் பேசும்போது, தமிழ் மாணவர்களின் தமிழறிவு குறைவாக உள்ளதன் காரணமாக இப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பயில வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இப்பள்ளியின் ஆசிரியர்களின் தன்னார்வப் பணி பாராட்டுக்குரியது.












Click it and Unblock the Notifications