ஈரானில் 3 இந்தியர்கள் கடத்தல்? கைகள் கட்டப்பட்டு உடல் முழுக்க வெட்டு காயங்கள்-குடும்பத்தினர் புகார்
தெஹ்ரான்: ஈரான் சென்றிருந்த மூன்று இந்திய இளைஞர்கள் மாயமாகியுள்ளனர். இதை ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது. இதற்கிடையே தங்கள் மகன்களை யாரோ கடத்திவிட்டதாகவும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மாயமான இளைஞர்களின் பெற்றோர் பரபர புகார்களை முன்வைத்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து பல ஆயிரம் பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கிறார்கள். அப்படி தான் ஈரான் நாட்டிற்குச் சென்ற மூன்று இந்தியர்கள் மாயமாகியுள்ளனர்.

இந்தியத் தூதரகம்
இந்தத் தகவலை தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது. மேலும், மாயமான இந்தியர்களைக் கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஈரான் அதிகாரிகளை இந்தியத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ட்விட்டரில், "ஈரானுக்கு சென்றிருந்த 3 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை ஈரான் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியிருக்கிறோம். மேலும் காணாமல் போன இந்தியர்களை உடனடியாக கண்டுபிடித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து அவர்களின் குடும்பத்தினருக்குத் தொடர்ந்து தகவல்களை அளித்து வருவதாகவும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் இளைஞர்கள்
ஈரானில் காணாமல் போன இந்த மூன்று இளைஞர்களுமே பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பஞ்சாபின் சங்ரூர், நவான்ஷஹர் மற்றும் ஹோஷியார்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்கள் ஒர்க் பெர்மிட் வாங்கிவிட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கே செல்லவிருந்தனர். ஆனால், அவர்களின் ஏஜெண்ட் தான் ஈரானில் சில காலம் தங்க வேண்டும்.. அதன் பிறகே ஆஸ்திரேலியா செல்ல விசா கிடைக்கும் எனச் சொல்லி அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கடத்தல் எனப் புகார்
இதற்கிடையே அந்த இளைஞர்களில் ஒருவரின் தாய், தனது மகன் உட்பட 3 பேரும் கடத்தப்பட்டுள்ளதாகப் பரபர குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "முதலில் ஈரானுக்கு போய் சில காலம் தங்கினால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு விசா கிடைக்கும் என்று சொல்லியே ஏஜெண்டுகள் அங்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்குத் தரையிறங்கிய உடனேயே அவர்கள் கடத்தப்பட்டனர். கடந்த மே 1ம் தேதி அவர்கள் கடத்தப்பட்டனர். பணத்தைக் கொடுத்தால் மட்டுமே விடுவிப்போம் எனக் கடத்தல்காரர்கள் மிரட்டுகிறார்கள்" என்றார்.
வெட்டு காயங்கள்
அதேபோல மற்றொரு நபரின் தாயாரும் அந்த ஏஜெண்டையே குற்றஞ்சாட்டி இருக்கிறார். அந்த பெண் கூறுகையில், "முறையான ஆவணங்களுடன் ஈரான் அழைத்துச் செல்வேன் எனச் சொல்லியே அந்த ஏஜெண்ட் பணம் வாங்கினான்.. ஆனால், கடைசியில் சட்டவிரோதமாகச் செல்லும் டன்கி ரூட் வழியாகவே எனது மகனை ஈரானுக்கு அனுப்பினார். அதுவே பிரச்சினைக்குக் காரணம்.. மேலும், கடத்தல்காரர்கள் மகன்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பினர், அதில் எனது பையனின் கைகள் கயிறுகளால் கட்டப்பட்டும், உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தன" என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
பகீர் குற்றச்சாட்டு
கடத்தப்பட்ட பிறகும் கூட சில நாட்கள் அந்த இளைஞர்களுடன் பேச முடிந்ததாம். ஆனால், மே 11ம் தேதிக்குப் பிறகு பணம் கொடுத்தால் தான் பேச முடியும் எனச் சொல்லி மிரட்டியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். அந்த இளைஞர்களை ஈரானுக்கு அனுப்பிய ஏஜெண்ட் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், காணாமல் போனவர்களில் ஒருவரது குடும்பத்தினர் பஞ்சாப் அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் மற்றும் ஹோஷியார்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார் ஆகியோரை சந்தித்தும் முறையிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications