போர் நிறுத்தம் அமலுக்கு வந்த அடுத்த நொடி.. வரிசையாக 3 இஸ்ரேல் அமைச்சர்கள் ராஜினாமா! என்ன காரணம்?
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகியுள்ள சூழலில், திடீரென இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெதன்யாகு அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவி வருகிறது.
இஸ்ரேல் ஹாமஸ் இடையே கடந்த 2023ம் ஆண்டு போர் தொடங்கியது. அப்போது இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது. மேலும், பல நூறு பேரைப் பணய கைதிகளாகப் பிடித்தும் சென்றது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்:
இதுவே இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடங்க காரணமாக இருந்தது. அதன் பிறகு காசாவுக்குள் மிகப் பெரியளவில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல், ஹமாஸ் படையினரைக் குறிவைத்து வேட்டையாடியது. அதேநேரம் இந்தத் தாக்குதலில் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களும் பெரியளவில் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், ஹமாஸை அழிக்கும் வரை போர் தொடரும் என்பதில் இஸ்ரேல் திட்டவட்டமாக இருந்தது.
இந்தச் சூழலில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டார். கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த சின்வாரை இஸ்ரேல் கொன்றது. இது மட்டுமின்றி ஹமாஸ் படையின் பல மேஜர் தலைவர்களையும் கூட இஸ்ரேல் குறிவைத்து காலி செய்தது. ஹமாஸ் தலைவர் உட்படப் பலரும் கொல்லப்பட்டதால் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. குறிப்பாகச் சர்வதேச அளவில் இதற்கான அழுத்தம் அதிகரித்தது.
போர் நிறுத்தம்:
இதற்காக இரு தரப்பிற்கும் இடையே எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தனாம் செய்தனர். முதற்கட்டமாக இரு தரப்பும் தாக்குதலை முழுமையாக நிறுத்தும். அதேநேரம் ஹமாஸ் வசம் உள்ள அமெரிக்கர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறும், பாலஸ்தீனிய மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் ஆகிய ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
செஞ்சிலுவைச் சங்கம்:
போர் நிறுத்தம் நேற்று ஜனவரி 19ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பணைய கைதிகள் விவரங்களை அறிவிக்க ஹமாஸ் தாமதித்தால் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்ந்தது. ஒரு வழியாக ஹமாஸ் தான் விடுவிக்கப் போகும் மூன்று பணைய கைதிகள் குறித்த விவரங்களை அறிவித்தது. இதையடுத்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ரோமி கோனென், டோரன் ஸ்டெய்ன்ப்ரெச்சர் மற்றும் எமிலி டமரி ஆகிய பணைய கைதிகள் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
3 அமைச்சர்கள் ராஜினாமா:
இப்படி பெரும் போராட்டத்திற்குப் பின்னரே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இடாமர் பென்-க்விர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், தற்போது இஸ்ரேலில் அமைந்துள்ள கூட்டணி அரசில் இடாமரின் ஓட்ஸ்ம் யெஹுடிட் அங்கம் வகித்து வந்த நிலையில், அந்த கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் மேலும் இரு அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர். அதாவது போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.
நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சும் ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இருப்பினும், ஹமாஸை முழுமையாக அழிக்கும் முன்பு போரை நிறுத்தினால் அவரது கட்சியும் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறும் என அவர் எச்சரித்தார். இப்படி அடுத்தடுத்து அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இஸ்ரேல் அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications