ஆப்கனில்.. போராடிய மக்கள் மீது தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு.. 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் காயம்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் கொடியை அகற்றி போராட்டம் நடத்தியதால் 3 பேரை தாலிபான்கள் சுட்டுக் கொன்றனர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில் தாலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது.
உள்ளூர் மக்கள் பலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஒரு சிலர் தாலிபான்கள் அடக்குமுறைக்கு பயந்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

தீவிர போராட்டம்
சிலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். தலிபான் போராளிகள் என்று கருதப்படும் ஆயுததாரிகள் தாலிபான்கள் கொடியை அகற்றியதற்காக ஜலாலாபாத்தில் ஒரு கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஜலாலாபாத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.

தாலிபான் கொடியை அகற்றினர்
தலைநகர் காபூலில் இருந்து 115 கிமீ தொலைவில் உள்ள கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள பஷ்டுனிஸ்தான் சதுக்கத்தில் இந்த மோதல் நடந்தது. முந்தைய ஆப்கானிஸ்தான் அரசின் கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை கொடிக்குப் பதிலாக ஏற்றப்பட்ட தாலிபான் கொடியை உள்ளூர்வாசிகள் அகற்றியதால் தாலிபான்கள் அவர்களை சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிக்கை வெளியிடவில்லை
ஜலாலாபாத்தில் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தலிபான் போராளிகளா என்பது குறித்து தலிபான்கள் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை. காபூலைக் கைப்பற்றியதிலிருந்து தாலிபான்கள் முந்தைய அரசின் கொடிகளை அகற்றி தங்கள் கொடிகளை தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஏற்றி வருகின்றனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிளர்ச்சியாளர்கள் தாலிபன்கள் கொடியை அகற்றுவதால் கோபம் கொண்டு அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, தடியடி தாக்குதல்களை அரங்கேற்றி வருகினறனர்.

பெண்களுக்கு மதிப்பு
பல்வேறு பகுதிகளில் தாலிபான்களுக்கு எதிராக சிறு சிறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானில் அமைதியான ஆட்சியை கொடுப்போம்; இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கு மதிப்பு கொடுப்போம் என்று தாலிபான்கள் கூறினாலும் அதனை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகள் நிலை குறித்து பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications