ஏமனில் தவிக்கும் தமிழர்களை காக்குமா அரசு
சனா: ஏமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களை மீட்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அங்குள்ள தமிழர்களை காக்க அரசு ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்று அங்கு தவித்து வரும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இதனால் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி, தலைநகர் சனாவிலிருந்து தலைமறைவானார். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறு சவுதி அரேபியாவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
வான் வழித்தாக்குதல்
ஹாதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப்படைகள் கடந்த வியாழக்கிழமை வான்வழி தாக்குதலை தொடங்கியது. இதில் கிளர்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன், அவர்களின் முகாம்கள் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டன.
தாயகம் திரும்பல்
ஏமனில் 3,500 இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். நர்ஸ் உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நேற்றைய தினம் 40 தமிழர்கள் உட்பட 350 பேர் பத்திரமாக தாயகம் திரும்பினர்.
தமிழர்கள் தவிப்பு
இந்த நிலையில் ஏமன் மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரியும்
தூத்துக்குடியைச் சேர்ந்த மரியா ஜேசுதாசன் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய தூதரகம் மூலம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்க மஸ்கட், ஓமனில் உள்ள விமான நிலையங்கள் அனுமதி அளிக்கவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இதனால் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அச்சத்துடன் வாழ்க்கை
7ஆம் நாளாக இன்றும் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் கேரளா அரசைப் போல தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேபோல ஏமனில் பொறியாளராக பணிபுரியும் திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் செந்தில்குமார், தாயகம் திரும்ப வழியின்றி தவித்து வருவதாக கூறியுள்ளார். திங்கட்கிழமையன்று இரவு குண்டு வெடிப்பதாக கூறிய அவர், அச்சத்துடனே வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளார்.
தொடர் குண்டுவெடிப்பு
தலைநகர் சனாவில் தொடர் குண்டுவெடிப்புகள் நடைபெறுவதாக அங்கு வசிக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த சக்தி என்ற பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே திங்கட்கிழமையன்று சனாவில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் செவ்வாய்கிழமையன்று கப்பல் மூலம் ஜீபோட்டிற்கு வந்த அவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் தாயகம் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications