10 ஆண்டுகளுக்குப் பின் பெத்லகேமில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு
பெத்லகேம்: யுனெஸ்கோ நிறுவனத்தால் வழங்கப் பட்டுள்ள புராதான அந்தஸ்தைத் தொடர்ந்து இந்தாண்டு பெத்லகேமிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டில் பாலஸ்தீனியப் பகுதிகளான வெஸ்ட் பேங்க்கில் தனது குடியிருப்புகளைக் கட்டத் துவங்கியதில் தனித்து வைக்கப்பட்ட பகுதியாக பெத்லகேம் மாறியது. இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அஞ்சப் பட்டது.
இந்நிலையில், இந்தாண்டு பெத்லகேமில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என அங்குள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வாழ்வாதாரம்...
சுமார் 25,000 பேர் மட்டுமே வாழும் பெத்லகேம் நகரில் மூன்றில் இரண்டு பகுதியினர் சுற்றுலாப்பயணிகளை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர்.

பெருமை மிகு நகரம்...
பாலஸ்தீனத்தைச் சேர்ந்திருந்தபோதிலும் இயேசு பிறந்த பெருமையைக் கொண்டிருந்த புராதன நகரான பெத்லகேமைச் சுற்றிலும் இஸ்ரேலின் 27 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. பெத்லகேமில் கட்டப்பட்ட புதியக் குடியிருப்புகள் மூலம் இஸ்ரேல் தாக்குதல்களிலிருந்து அது பாதுகாக்கப்பட்ட போதும், தனிமைப் படுத்தப் பட்ட பகுதியாக அது மாறியது.

இடையூறுகள்....
இதனால் உயர்ந்த மதில் சுவர்களும், வேலிகளும் மற்றும் ஓயாது தென்படும் சோதனைச் சாவடிகளும் இங்கு வந்துகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக மாறத் தொடங்கின.

குறைவான எண்ணிக்கை...
ஜெருசலேமிலிருந்து வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதும் இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பினால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு வெகுவாகக் குறைந்தது.

உலக பாரம்பரிய அந்தஸ்து...
இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பெத்லகேமில் உள்ள புராதனமான தேவாலயத்திற்கு உலக பாரம்பரிய அந்தஸ்தை வழங்க யுனெஸ்கோ நிறுவனம் முடிவு செய்தது. இதன்மூலம் அங்கு மீண்டும் சுற்றுலாத்துறையை வளர்ச்சி அடையச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை உண்டானது.

பொருளாதார வளர்ச்சி...
இது குறித்து பாலஸ்தீனத்தின் சுற்றுலாத்துறை அமைச்சரான ரோலா மாயா கூறுகையில், ‘கடந்த 2011-12 ஆம் ஆண்டில் 2 மில்லியன் மக்கள் பெத்லகேம் நகருக்கு வருகை தந்துள்ளனர். 2012 ஆம் ஆண்டில் 18 சதவிகிதத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்திருப்பது பொருளாதார வளர்ச்சி உயர்வையும் குறிப்பிடுகின்றது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு....
எனவே இருண்டு கிடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை பெத்லகேம் எதிர்நோக்கியுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பனிப்பொழிவு....
தற்போது அங்கு வரலாறு காணாத அளவு பனி பொழிவு காணப் படும் சூழ்நிலையிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications