திரிபுரா தேர்தலில் விறு விறு வாக்குப் பதிவு: புதிய சரித்திரம் படைக்கப் போவது பாஜகவா? இடதுசாரிகளா?
திரிபுராவில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா? இடதுசாரிகள் மீண்டு எழுவார்களா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அகர்தலா: திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா? இழந்த செல்வாக்கை இடதுசாரிகள் தங்களது பரம எதிரியான காங்கிரஸுடன் இணைந்து மீட்டெடுப்பார்களா? என்கிற பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது அம்மாநில சட்டசபை தேர்தல்.
திரிபுரா மாநிலத்தின் 60 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரிபுரா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திரிபுரா மாநிலத்தைப் பொறுத்தவரை 2018-ம் ஆண்டு பாஜக 5% வாக்குகளை மட்டுமே பெற்ற சிறிய கட்சி. ஆனால் 2018-ம் ஆண்டு தேர்தல் மூலமாக சிபிஎம்-க்கு ஒரு மாற்று அரசியல் கட்சியாக தன்னை கால்பதிக்க தொடங்கியது பாஜக. 25 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சிக்கு சவால்விடக் கூடிய வல்லமை பாஜகவுக்கு இருக்கிறது என்பதற்கான சிக்னல் கிடைத்த தேர்தல். திரிபுராவில் இடதுசாரிகளுக்கு பரம வைரியாக இருந்த காங்கிரஸ் தனது இடத்தை இழந்து கொண்டிருப்பதையும் 2018 தேர்தல் வெளிப்படுத்தியது. பின்னர் இது விஸ்வரூபம் எடுத்து ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைகளும் அப்படியே பாஜகவுக்கு தாவிவிட்டனர். பாஜக தொடக்கம் முதலே ஐபிஎப்டி என்ற் பழங்குடி அமைப்பை கூட்டணி கட்சியாக வைத்து வருகிற்து.
ஆனால் 2023-ம் ஆண்டு தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தல் பாஜகவே எதிர்பாராத ஒன்று. அதாவது திரிபுராவில் திமுக- அதிமுக என எதிரும் புதிருமாக இருந்த இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இன்னொரு புதிய அச்சுறுத்தலாக புதிய பழங்குடிகள் கட்சியான திப்ரா மோதா, தேர்தல் களத்தில் பேரலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. திப்ரா மோதா என்பது திரிபுரா பழங்குடி மக்களுக்கான அகன்ற தனி மாநிலமான திப்ரலாந்து கோரிக்கையை வலியுறுத்தக் கூடியது. 2 ஆண்டுகளே ஆன இந்த கட்சிக்கு பேராதரவு இருக்கிறது என்பது மூத்த பத்திரிகையாளர்கள் பலரது கருத்து. திரிபுராவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 20 தொகுதிகள் பழங்குடிகளுக்கானது. இந்த 20 தொகுதிகளையும் அப்படியே திப்ரா மோதா அள்ளவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். அத்துடன் கடந்த பல மாதங்களாக பாஜகவின் கூட்டணியில் உள்ள ஐபிஎப்டி தலைவர்கள் பலரும் திப்ரா மோதாவுக்கு தாவிட்டனர்.
அதாவது பாஜகவுக்கு எதிரான கூட்டணி வலிமையாக இருக்கிறது; பாஜக அணியின் வலிமையை புதிய திப்ரா மோதா சிதைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் பாஜகவுக்குள்ளேயும் உட்கட்சி மோதல் ரணகளமாக இருந்து வருகிறது. இந்த காரணங்களால் பாஜக மீண்டும் திரிபுராவில் ஆட்சியை பிடிக்குமா? என்பது பெரும் கேள்விக்குறி என்கின்றனர். அப்படி பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால் மிகப் பெரிய சரித்திரமாகவே அது பேசப்படும் என்பது வடகிழக்கு அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

திரிபுரா தேர்தல்
திரிபுராவில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது.திரிபுராவில் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் மொத்தம் 28.13 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். தேர்தல் களத்தில் 259 பேர் வேட்பாளர்கள்; இவர்களில் 28 பேர் பெண்கள். பாஜக மொத்தம் 55 தொகுதிகளில் போட்டியிடுகிறது; பாஜகவின் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிகளாக இருந்தாலும் ஒரு தொகுதியில் இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன. சிபிஎம் 47; காங்கிரஸ் 13 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications