வடகொரியாவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும்... ஆசிய பசிபிக் நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு
வடகொரியாவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என ஆசிய பசிபிக் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
தனாங்: வடகொரியாவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என ஆசிய பசிபிக் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐநா சபை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. ஐநா மன்றம் பொருளாதார தடை விதித்தும் அசராத வடகொரியா இதற்கு காரணமான அமெரிக்கா அதற்கான விளையை கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்து வருகிறது.
அண்மையில் வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. இதனால் சுரங்கம் இடிந்துவிழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஜப்பான் செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.
அச்சுறுத்தும் வடகொரியா
ஆனால் இதனை மறுத்த வடகொரியா எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத தாக்குதல் நடத்தப்படும் என மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனை ராணுவ விமானங்களின் போர் ஒத்திகை நடத்தி வருகிறது.
12 நாள் சுற்றுப்பயணம்
இந்நிலையில் அணு ஆயுத திட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகளின் ஆதரவை பெறும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஆசிய நாடுகளுக்கு 12 நாள் சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டு உள்ளார்.
வியட்நாம் பயணம்
தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட டிரம்ப் வியட்நாம் சென்றார். அங்குள்ள கடற்கரை நகரான தனாங்கில் நேற்று நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான மன்றத்தில் அவர் உரையாற்றினார்.
எதிராக இணைய வேண்டும்
அப்போது ஒரு சர்வாதிகாரியின் வன்முறை ஆக்கிரமிப்பு மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தலின் இங்குள்ள மக்களின் எதிர்காலமும் பிணைக்கைதியாக சிக்கிவிடக்கூடாது என்றார். பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை நோக்கி வடகொரியா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மிகப்பெரிய அபாயமாக எடுத்துக்கொண்டு அந்த நாட்டுக்கு எதிராக இந்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்கா தயார்
நியாயமான பரஸ்பர வர்த்தகத்தை கொண்டிருப்பதால் ஆசிய பசிபிக் பொருளாதார மன்றத்துடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட அமெரிக்கா தயாராகி விட்டதாகவும் ட்ரம்ப் கூறினார். மேலும் தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளும் கூட்டாளிகளும் விதிமுறைகளை உண்மையாக கடைப்பிடிக்க வேண்டும் என தாங்கள் எதிர்பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.