என்னது சுவர் கட்ட பணம் இல்லையா.? ’அரசாங்கத்தை இழுத்து மூடுங்க’ அதிபர் ட்ரம்பின் அதிரடி ட்வீட்.
வாஷிங்டன்(யு.எஸ்): செப்டம்பரில் அரசாங்கத்தை இழுத்து மூடுங்கள் என்று அதிபர் ட்ரம்ப் ஆவேசமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசு செலவீ னங்களுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டிற்காக செனட் அவையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.
பட்ஜெட் ஒப்புதலுக்கு 60 செனட் உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு 52 செனட்டர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 46 செனட்டர்களும் உள்ளனர்.
இரண்டு சுயேட்சை செனட்டர்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர்கள்.
பட்ஜெட் ஒப்புதல்கள் தேவையான 60 செனட்டர்கள் எண்ணிக்கைக்கு, ஜனநாயகக் கட்சியின் செனட்டர்களும் என்பதால், அவர்கள் ஏகப்பட்ட நெருக்கடி கொடுத்துள்ளனர்.
ட்ரம்பின் கனவுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுவர் கட்டுவதற்கு சல்லிக்காசு கூட ஒதுக்க ஜனநாயகக் கட்சியினர் மறுத்துவிட்டனர்.
சட்டபூர்வமற்ற முறையில் குடியேறிவர்களுக்கு 'புகலிட நகரங்கள்' என்று சொல்லப்படும் நகரங்களுக்கு மத்திய அரசு நிதியை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் கோரிக்கை வைத்தார். அதையும் ஜனநாயகக் கட்சியினர் ஏற்கவில்லை.
தேசிய சுகாதார மையத்திற்கு நிதியை குறைக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார். ஆனால் 2 பில்லியன் டாலர்கள் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ட்ரம்பின் விருப்பத்திற்கு மாறாக, இயற்கை எரிசக்தி திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்படி ட்ரம்ப் கேட்ட திட்டங்களுக்கு மறுக்கப்பட்டு, அவருக்கு விருப்பமில்லாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ட்ரம்ப், "செனட் அவையில் 60 பேர் நமது கட்சிக்கு இல்லாத காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
2018 இடைத்தேர்தலில் கூடுதல் குடியரசுக் கட்சி செனட்டர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது பட்ஜெட் ஒதுகீடுக்கான செனட்டர்கள் எண்ணிக்கையை 51 ஆக இப்போதே குறைத்து விடுங்கள்,
இந்த குழப்பங்களை சரி செய்ய செப்டம்பர் மாதம் நமது அரசாங்கத்தை செப்டம்பர் மாதம் முடக்குவது அவசியமாகும்" என்று ட்விட் செய்துள்ளார்.
தற்போதைய பட்ஜெட் செப்டம்பர் மாத இறுதி வரைக்கும் என்பதால், மீண்டும் ஒரு பட்ஜெட் ஒதுக்கீடு அப்போது தேவை. அதைக் குறிப்பிட்டு,
அரசாங்கம் முடங்கினாலும் பரவாயில்லை, அடுத்த பட்ஜெட்டில் ஜனநாயகக் கட்சியினரின் பாட்சா பலிக்கக்கூடாது என்ற ரீதியில் இப்படி ட்விட் செய்துள்ளார்.
அதிபர் கிடையாது, இரண்டு அவையிலும் மெஜாரிட்டி கிடையாது. ஆனாலும் தாங்கள் விரும்பியது போல் பட்ஜெட் தாக்கல் செய்ய வைத்த எதிர்க்கட்சியான ஜனநாயக் கட்சியினர் வெற்றிக் களிப்புடன் இருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் இந்தியாவில் நடக்குமா என்ன?