ஹாவர்ட் பல்கலைக்கழக விஷயத்தில் நோஸ்-கட்! திடீரென ஜகா வாங்கிய டிரம்ப் தரப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகமான ஹாவர்டில், பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அதிகம் நடைபெற்றன. இதனை ஒடுக்கும் விதமாகவும், இனி வரும் நாட்களில் இப்படியான போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும், பல்வேறு நெருக்கடிகளை டிரம்ப் அரசு கொடுக்க தொடங்கியது. சமீபத்தில் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம்தான் இதற்கு சாட்சி.
ஆனால் இந்த கடிதம் அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அனுப்பவில்லை என்றும், அதிகாரி ஒருவர் தன்னிச்சையாக அனுப்பியிருக்கிறார் என்றும் டிரம்ப் தரப்பு தற்போது பின்வாங்கியிருக்கிறது.

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போருக்கு, உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்திலிருந்து எழுந்த எதிர்ப்புதான் சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்றிருந்தது. அமெரிக்காவுக்கு உள் இருந்து இப்படி ஒரு எதிர்ப்பு எழும் என்று டிரம்ப் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் போல. அந்த அளவுக்கு இஸ்ரேலுக்கு எதிராக மாணவர்கள் தீவிரமாக நின்று களமாடினார்கள். இந்த போராட்டத்திற்கு பலத்த ஆதரவும் மக்கள் மத்தியில் இருந்தது.
இதை அமெரிக்க அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், அமெரிக்கா இஸ்ரேல் ஆதரவு நாடு. தான் ஆதரவளிக்கும் நாட்டுக்கு எதிராக தன்னுடைய சொந்த பல்கலைக்கழக மாணவர்களே போர்க்கொடி உயர்த்தியது அமெரிக்க அரசுக்கு கவுரவ பிரச்சனையாக கிளம்பியது. ஆனால் ஹாவர்ட் பல்கலைக்கழகம் ஏதோ இஸ்ரேல் விஷயத்திற்காக மட்டுமே கொந்தளித்தது என்று சொல்லிவிட முடியாது. வரலாறு நெடுகிலும் பல்வேறு சர்வதேச பிரச்சனைகளுக்கு எதிராக இந்த பல்கலைக்கழகம் களமாடியிருக்கிறது என்பது தனிக்கதை.
சரி விஷயத்திற்கு வருவோம். மேட்டர் என்னவெனில், ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் இறங்கிய மாணவர்களை ஒவ்வொருவராக அமெரிக்க கல்வித்துறை அடையாளம் கண்டது. போராட்டத்திற்கு தலைமையேற்ற மாணவர் சிலருக்கு விசாவையும் கூட ரத்து செய்தது. இத்துடன் நிற்காமல் அமெரிக்க மனிதவள துறையிடமிருந்து பல்கலைக்கழகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அக்கடிதத்தில் மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் மற்றும் பணியாளர்கள் நியமனம் விஷயங்களில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் மற்றும் பணியாளர்கள் நியமனம் ஆகியவற்றில் யூத (இஸ்ரேல் மக்கள் யூதர்கள் என அழைக்கப்படுகிறார்கள்) ஆதரவு நிலைப்பாட்டு பின்பற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது பொது வெளியில் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. இந்த கடிதம் விஷயத்தில் சூடான பல்கலைக்கழக நிர்வாகம், "பாருங்க இது தன்னாட்சி பல்கலைக்கழகம். இதன் பாடதிட்டம், நிர்வாக முடிவுகளை யாரும் வெளியிலிருந்து எடுக்க முடியாது" என்று அதிரடியாக பதிலளித்திருந்தது.
பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். அமெரிக்கா தனது சொந்த பல்கலைக்கழகத்தின் குரலையே நசுக்கப்பார்க்கிறது என்று சர்வதேச அளவில் விவாதங்கள் வெடித்தன. இந்நிலையில், இந்த கடிதம் மனித வள துறையிலிருந்து அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படவில்லை, மாறாக இந்த துறையை சேர்ந்த சட்ட ஆலோசகர் சீன் கீவெனி, தன்னிச்சையாக கடிதத்தை அனுப்பியுள்ளார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
இது பற்றி சட்ட ஆலோசகர் சீன் பதில் எதையும் தெரிவிக்கவில்லை. சர்வதேச மற்றும் அமெரிக்க கல்வியாளர்களின் அழுத்தத்திற்கு பயந்துதான் டிரம்ப் நிர்வாகம் கடித விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications