பாக். குழந்தைகள் கொலைக்கு காரணமான தீவிரவாதி மவுலானா கொலையா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் குழந்தைகள் கொலை செய்யப்பட காரணமாக இருந்த, தெரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா பஸ்லுல்லா கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெரிக் இ தாலிபான் அமைப்பின் தீவிரவாதிகள் சில தினங்கள் முன்பு பெஷாவரிலுள்ள ராணுவ பள்ளிக்குள் புகுந்து வெறியாட்டம் போட்டு பல குழந்தைகளை கொன்று குவித்தனர். இந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லுல்லா, ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டுவந்தது. அவருக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாக பாக். முன்னாள் அதிபர் முஷ்ரப் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து நடத்திய ட்ரோன் விமான தாக்குதலில் மவுலானா பஸ்லுல்லா உயிரிழந்துவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தனது பேஸ்புக் பக்கத்திலும் தெரிவித்துள்ளது.
ஆனால், 2010ம் ஆண்டிலும் இதேபோல பஸ்லுல்லா பலியானதாக தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல புரளியாக இது மாறிவிடக்கூடாது என்பதற்காக உறுதி செய்துவிட்டே தகவலை வெளியிட்டுள்ளதாக கூறுகின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்.