ஏமன் உள்நாட்டு கலவரத்தில் சிக்கி 2 தமிழர்கள் பலி
சென்னை: ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில், சவுதி அரேபியா எல்லையில் ஹராத் நகரில் நடந்த சண்டையில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமன் நாட்டில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ஹவுதி கிளர்ச்சியாளருக்கும் இடையே கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடை பெற்று வருகிறது. இதில் இருதரப்பினரும் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியாவும் அதன் கூட்டு படையினரும் களம் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு இயல்பு நிலை திரும்பி இருந்தது. இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சவுதி அரேபியா எல்லையில் ஹராத் நகரில், ஏமன் படையினரும், கிளர்ச்சியாளர்களும் இடையே கடுமையாக சண்டை நடைபெற்றது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த சண்டையில், இதுவரை 75 பேர் வரை பலியாகி இருக்கின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம் முகமது, கள்ளக் குறிச்சியை சேர்ந்த அந்தோணி ஆகியோர் பலியாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து இருவரது உடல்களையும் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்புல்லாணி ஒன்றியம் பிச்சாவலசை கிராமத்தை சேர்ந்த முகமது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பே சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற அவர் ஏமன் நாட்டின் எல்லையோர நகரமான நஜ்ரனில் தங்கி வேலை செய்து வந்தார்.
கடந்த ஜூன் மாதம் தான் சொந்த ஊருக்கு வந்து திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில்தான் ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியா இடையே நடந்த குண்டு வீச்சில் முகமது பலியாகி இருக்கிறார். முகமதுவுக்கு பரக்கத் நிஷா என்ற மனைவியும், வாஜித் என்ற மகனும், அஸ்மத் என்ற மகளும் உள்ளனர்.
குண்டு வீச்சில் பலியான கள்ளக்குறிச்சியை சேர்ந்த அந்தோணி பற்றிய முழு விவரம் தெரியவில்லை. போலீசார் அந்தோணி பற்றி அறிய விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான 2 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications