கலிபோர்னியா பல்கலையில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது இந்திய வம்சாவளி அமெரிக்கர் !
லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். விசாரணையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனவும், பல்கலைக் கழக பேராசிரியரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இந்தியாவில் கராக்பூர் ஐ.ஐ.டி.யில் 2000-ம் ஆண்டு படித்த மாணிக்சர்க்கார் (38) என்ற இந்திய வம்சாவளி அமெரிக்கர் தான் என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த வில்லியம் க்ளக் (39) என்ற பேராசிரியருடன் மாணிக்சர்க்காருக்கு முன்விரோதம் இருந்ததாகவும் அதன் காரணமாக மாணிக்சர்க்கார், திட்டமிட்டு பேராசிரியரை கொல்ல நேற்று பல்கலைக் கழக வளாகத்திற்குள் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார் எனவும் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.