மனைவி, 3 மகள்கள் அனுமதியுடன் தற்கொலை செய்து கொண்ட யு.கே. தொழில் அதிபர்
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது மனைவி, 3 மகள்களிடம் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள லங்காஷயரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெப்ரி ஸ்பெக்டர்(54). அவரது மனைவி எலெய்ன்(53). அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜெப்ரிக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
வலி அதிகரிக்கவே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது முதுகு எலும்பில் கட்டி உள்ளது என்றும் அது நாளுக்கு நாள் வளரக்கூடும் என்றும் அது வளரத் துவங்கினால் அவரின் உடல் கழுத்திற்கு கீழ் செயல்படாது என்றும் தெரிவித்தனர். கடந்த 6 ஆண்டுகளாக வலியுடன் வாழ்ந்து வந்த அவரின் நிலைமை மோசமாகத் துவங்கியது. ஓடியாடி உழைத்து வந்த ஜெப்ரியால் உடல் செயல் இழந்து ஒரு இடத்தில் முடங்குவது, பிறரை நம்பி வாழ்வது பிடிக்கவில்லை.
இதையடுத்து அவர் கை, கால்கள் நன்றாக இருக்கும்போதே தற்கொலை செய்ய முடிவு செய்தார். இந்த முடிவை தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார். அவர்களுக்கு அவரின் முடிவு பிடிக்காவிட்டாலும் அவரை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதன் பிறகு ஜெப்ரி சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரில் உள்ள டிக்னிடாஸ் அமைப்பின் மருத்துவமனையில் சேர்ந்தார்.
அந்த மருத்துவமனையில் தற்கொலை செய்ய உதவி செய்யப்படுகிறது. அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெப்ரி தனது குடும்பத்தாருடன் சேர்ந்து கடைசியாக கடந்த வியாழக்கிழமை இரவு உணவை சாப்பிட்டார். அதன் பிறகு 16 மணிநேரம் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனை அளித்த விஷத்தை சாப்பிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் சுவிட்சர்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. டிக்னிடாஸில் இதுவரை 300 இங்கிலாந்து குடிமக்கள் தற்கொலை செய்துள்ளனர். 1998ம் ஆண்டு துவங்கப்பட்ட டிக்னிடாஸ் என்ற அமைப்பு குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள உதவி செய்து வருகிறது.