கொள்ளையடித்த வீட்டில் குட்டித் தூக்கம்... போலீசில் சிக்கிய திருடனுக்கு 18 மாத சிறை
லண்டன்: கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் களைப்பில் சிறிது நேரம் படுத்துத் தூங்கியதால் திருடன் ஒருவன் போலீசில் சிக்கிய வேடிக்கையான சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் நடந்துள்ளது.
பிரான்கி பிலானிகன் என்ற 22 வயது திருடன் ஒருவன் இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் போர்ட்சையர் என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் திருடச் சென்றுள்ளான். அங்கிருந்த பொருட்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து மூட்டை கட்டிய பிரான்கி, திருடிய களைப்பில் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள நினைத்துள்ளான்.
அந்த வீட்டின் படுக்கையறையில் கட்டிலில் படுத்த பிரான்கி, தன்னையறியாமல் அயர்ந்து தூங்கி விட்டான். இதற்கிடையே வீட்டிற்குத் திரும்பிய அதன் உரிமையாளர், வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
படுக்கையறையில் திருடன் ஒருவன் உறங்குவதைக் கண்டதும், உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே விரைந்து வந்த போலீசார் தூங்கிய கொள்ளையனை தட்டி எழுப்பி அவனைக் கைது செய்தனர்.
பிரான்கி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவனுக்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications