ஆட்சியை தக்கவைப்பாரா தெரசா மே...பிரிட்டனில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லண்டனர் : பிரிட்டனில் 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்காக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது, வாக்குப்பதிவு முடிந்ததுமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டே முடிவடைய வேண்டும். ஆனால் பிரிட்டன் நாடு, பிரெக்சிட் என்று சொல்லப்படும் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக திடீரென முடிவு எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இந்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை தேவை என்பதால் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்தார்.
இதற்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அந்த நாட்டில் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுவதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்த நிலையில் மான்செஸ்டரில் நடந்த தீவிரவாத தாக்குதல், லண்டன் நாடாளுமன்ற்ம அருகே சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஆளும் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் முதலில் தெரசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிர்க்கட்சியான தொழிற்கட்சியை விட 20 சதவீதம் ஆதரவு இருப்பதாக காட்டின. ஆனால் இந்த ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. தொழிற்கட்சியை விட கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஒரு சதவீதம் மட்டுமே கூடுதல் ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 41.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 40.4 சதவீதம் பேர் ஆதரவு அளிக்கின்றனர்.
கடைசி கட்ட கருத்துக்கணிப்புகள் தெரசா மேவிற்கு எதிராக உள்ளதால் கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியைத் தக்க வைப்பாரா? என்பது குறித்து வாக்குப்பதிவு முடிந்த உடனே நடத்தப்படும் வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் முடிவுகள் தெரிய வரும்.