தடையை நீக்கக் கோரி கேமரூனுக்கு 2 பெட்டி ‘அல்போன்சா’ வழங்கிய இந்திய வம்சாவளி எம்.பி
லண்டன்: பூச்சி பயத்தால் இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்கக் கோரி இங்கிலாந்து பிரதமர் கேமரூனைச் சந்தித்த இந்திய வம்சாவளி எம்.பி.யும், தொழிலாளர் கட்சியின் மூத்தத் தலைவருமான கேத் வாஸ், அவருக்கு இரண்டு பெட்டி மாம்பழங்களை அன்பளிப்பாக வழங்கினார்.
இந்திய மாம்பழங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் இந்திய வம்சாவளி எம்.பி.யும், தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவருமான கேத் வாஸ் இந்திய மாம்பழ இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று மதியம் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்தார்.
அப்போது டேவிட் கேமரூனுக்கு இரண்டு பெட்டி அல்போன்சா மாம்பழங்களை கேத் வாஸ் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சந்திப்பு குறித்து கேத் வாஸ் கூறியிருப்பதாவது :-
இந்தியாவுடனான உறவுக்கு தான் தீவிர ஆதரவாளர் என்பதை பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியன் வகுத்துள்ள விதிகளை இந்திய அரசு ஏற்று செயல்படுத்தி உள்ளது. எனவே இந்திய மாம்பழத்தின் மீதான தடை அர்த்தமற்றது. இங்கிலாந்து பொருளாதாரத்தில் இது பலகோடி இழப்புக்கு வழிவகுக்கும். இந்தியாவிலும் பல கோடி மாம்பழங்கள் வீணாய்ப்போய் விடும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.