‘தங்க மீனை’த் தாக்கிய பூனைக்குட்டியை மைக்ரோவேவில் வேக வைத்த லண்டன் பெண்
லண்டன்: தான் ஆசையாக வளர்த்த தங்கமீன்களைத் தாக்கியக் குற்றத்திற்காக பூனைக்குட்டி ஒன்றை மைக்ரோவேவில் வேக வைத்து கொலை செய்துள்ளார் லண்டன் பெண் ஒருவர்.
லண்டனின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோய்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் குன்லிஃபி என்ற 23 வயது இளம்பெண். இவர் தனது வீட்டில் தங்க மீன்கள் மற்றும் பிறந்து நான்கு மாத காலமே ஆன மௌஃக்லி என்ற பூனைக் குட்டியை வளர்த்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று பூனைக்குட்டி தங்கமீன்கள் வைத்திருந்த கண்ணாடி தொட்டியைத் தாக்கியுள்ளது. இதனால் மீன்தொட்டி கீழே விழுந்து தங்கமீன்கள் காயமடைந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த குன்லிஃபி, பூனைக் குட்டியைத் தண்டிக்கும் விதமாக அதனை மைக்ரோவேவ்வில் சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்துள்ளார்.
இதனால் பூனைக்குட்டியின் உடல் பாகங்கள் வெந்து போயுள்ளது. மைக்ரோவேவிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட பூனைக்குட்டி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பூனைக்குட்டியை மைக்ரோவேவில் வைத்து கொலை செய்த தகவல் அறிந்த பிராணிகள் வதை தடுப்பு அமைப்பினர் குன்லிஃபி மீது வழக்குத் தொடுத்துள்ளனர். அடுத்தமாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுவதாக அந்நாட்டுப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications