"Stinking ********.. 3 மாத பிஞ்சை கூட விடவில்லை!" பிரஸ் மீட்டில் ஆவேசமான ஜெலன்ஸ்கி.. நடந்தது என்ன
கீவ்: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், ரஷ்ய ராணுவம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த பிப். மாதம் ரஷ்யா முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. இந்தப் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த போர் காரணமாக உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடரும் போர்
இதனிடையே கடந்த மாதம் உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் பல விவகாரங்களில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. நேட்டோவில் சேரும் முடிவை விட்டுவிட்டு நடுநிலை நிலைப்பாட்டை எடுக்க உக்ரைன் சம்மதித்தது. அதேபோல உக்ரைன் தலைநகர் கீவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ராணுவத்தைக் குறைக்கவும் ரஷ்யா ஒப்புக்கொண்டது. இருப்பினும், சில நாட்களிலேயே தங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவதாகக் கூறிய ரஷ்யா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது.

ஏவுகணை தாக்குதல்
அதன்படி முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாகக் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, தெற்கு உக்ரைனில் உள்ள துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஒடேசாவில் உள்ள ஒரு ராணுவ தளம் மற்றும் இரண்டு குடியிருப்பு கட்டிடங்களை இரண்டு ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியுள்ளன.

கட்டிடங்கள்
இந்தத் தாக்குதலில் 3 மாத கைக்குழந்தை ஒன்றும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தலைநகர் கீவ் நகரில் ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி ரஷ்யாவை மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார். ரஷ்ய வீரர்களைக் கெட்ட வார்த்தைகளில் திட்டிய அவர், ரஷ்யா எவ்வளவு மோசமானது என்பதையே இது காட்டும் வகையில் உள்ளதாகச் சாடினார்.

ஆவேசமான ஜெலன்ஸ்கி
ஈஸ்டர் நாட்களில் கூட ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்து வருவதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்தார். அதேநேரம் உக்ரைன் நாட்டில் மேலும் பல குழந்தைகள் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அமைதிப் பேச்சுக்களைத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மூன்று மாத குழந்தை ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்ட நிலையில், ஜெலன்ஸ்கி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே காணப்பட்டார்.

மரியுபோல்
உக்ரைன் நாட்டின் துறைமுக நகரமான மரியுபோல் நகரைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. குறிப்பாக மரியுபோல் நகரில் பல வாரங்களாகத் தொடர்ந்து சண்டை நடைபெறுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் மரியுபோல் நகரம் முழுமையாக ரஷ்யா வசம் சென்றது. அங்கு ரஷ்யா ராணுவத்தின் தாக்குதல் தொரும் நிலையில், அங்குள்ள எஃகு ஆலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தஞ்சம் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications