உக்ரைன்: ராணுவ விமானத்தை போராளிகள் சுட்டு வீழ்த்தியதில் 49 வீரர்கள் பலி
லுகான்ஸ்க்: உக்ரைனில் ராணுவ விமானமொன்றை போராளிகள் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த 49 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவது தொடர்பாக கடந்தாண்டு அங்கு பிரச்சினை வெடித்தது. உக்ரைனின் கிழக்குப் பகுதியான கிரிமியா உலக நாடுகளின் பலத்த எதிர்ப்பிற்கிடையே ரஷ்யாவுடன் இணைந்தது. அதுபோல் இன்னும் சில கிழக்குப் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, போராளிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நகரங்களில் ஒன்றான லுகான்ஸில், விமான நிலையத்தை தங்களின் வசம் வைத்துக் கொண்டுள்ளது உக்ரைன் அரசு. மேலும், போர்ப் பணியில் இருக்கும் அரசு துருப்புகளை சுழற்சி முறையில் மாற்றி விட இந்த நிலையத்தைப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றது.
இந்நிலையில், இன்று அதிகாலை 40 படை வீரர்களையும், ஒன்பது ஊழியர்களும் கொண்ட உக்ரைன் அரசு ராணுவ விமானம் ஒன்று லுகான்ஸ்க் விமான நிலையத்தை நோக்கி வந்தது. அப்போது அவ்விமானத்தின் மீது போராளிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த அனைவருமே பலியாகிவிட்டதாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் செய்தித் தொடர்பாளரான விளாடிஸ்லாவ் செலிஸ்நியோவ் உறுதி செய்துள்ளார்.
நேற்று போராளிகளின் ஆதிக்கத்தில் இருந்த முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை அரசுத் துருப்புகள் கைப்பற்றின. இந்நிலையில், இன்று போராளிகள் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் கடந்த இரண்டு மாத கலவரங்களில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 4,00,000 மக்கள் வசிக்கும் லுகான்ஸ்க் நகரில் இன்று காலை முதலே வெடிச்சத்தங்களும், கடும் சண்டை நடந்து கொண்டிருப்பதற்கான சத்தங்களும் கேட்டுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications