"அவங்க பிளானே வேற! சொன்னால் புரிந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்!"யாருக்காக சொல்கிறார் ஜெலன்ஸ்கி பரபர உக்ரைன்
கீவ்: உக்ரைன் ரஷ்யா போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். இறுதியில் முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தப் போர் காரணமாகப் பல லட்சம் உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்த வீட்டையும் வாழும் பகுதிகளையும் விட்டும் வெளியேறி உள்ளனர்.
போரில் சரணடைந்தால் உயிர் பிழைப்பீர்கள்! உக்ரைன் போராளிகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
உக்ரைன் போர்
போர் தொடங்கிய சமயத்தில் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேநேரம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பல விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் போர் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், உக்ரைன் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகக் கூறி, ரஷ்யா குறிப்பிட்ட பகுதிகளில் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
தலைவிதி
இதனால் உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் மீண்டும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் தலைவிதி நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தீர்மானிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவும் கூட அதன் முக்கிய இலக்கு என்பது உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனை விடுவிப்பது என்றே கூறியுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.
வெறும் ஆரம்பம்
அதிபர் ஜெலன்ஸ்கி இது குறித்துப் பேசுகையில், "இசியம், டான்பாஸ், அசோவ் கடற்கரை, மரியுபோல், கெர்சன் ஒப்லாஸ்ட் ஆகிய பகுதிகள் தான் இந்த போரின் தலைவிதி மற்றும் நமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடங்களான உள்ளன. புதினின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை வெறும் ஆரம்பம் மட்டும் தான். விளாடிமிர் புதின் மற்ற ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றத் தனது படைகளை நிச்சயம் மேலும் மேற்கு நோக்கி நகர்த்துவார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
இணைந்து போராட வேண்டும்
நம்மைப் போலவே சுதந்திரத்தை நம்பும் அனைத்து நாடுகளும் நம்முடன் இணைந்து போராட வேண்டும். அவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும், ஏனென்றால் ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் நாங்கள் முதலில் இருக்கிறோம். அடுத்து யார் இருப்பார்கள் என யாருக்குத் தெரியும்" என்று ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் பேசினார். சமீபத்தில் தான் உக்ரைன் கிழக்கு பகுதியை மட்டுமின்றி ஒட்டுமொத்த உக்ரைன் நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புவதாக ரஷ்யத் தளபதி கூறியிருந்த நிலையில், இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யா
உக்ரைன் நாட்டின் பல முக்கிய பகுதிகளில் ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. பல நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தெற்கு உக்ரைனின் துறைமுக நகரமாக மரியுபோல் நகரைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலைக் கடந்த சில நாட்களில் தீவிரப்படுத்தியது. சுமார் 2 மாதங்களுக்கு மேலாக இங்குத் தாக்குதல் நீடித்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் மரியுபோல் நகரம் ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.