உக்ரைன் - ரஷ்யா போருக்கு பிறகு முதல் முறை..ஜெலன்ஸ்கியை சந்தித்த பிரதமர் மோடி..கவனித்த ஜி 7 நாடுகள்
டோக்கியோ: ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிக்கு பிறகு பிரதமர் மோடி பேசுகையில், " உக்ரைன் மீதான போரை வெறும் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினையாக மட்டும் நான் கருதவில்லை. இது மனிதகுலத்தின் பிர்ச்சினை" என்றார்.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இணைந்து ஜி 7 என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. சக்தி வாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பாக கருதப்படும் இந்த ஜி 7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது.

மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஹிரோஷிமா நகரில் முகாமிட்டுள்ளனர். ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட தலைவர்களுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடியும் ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் சென்ற பிரதமர் மோடியை நேற்று ஹிரோஷிமா விமான நிலையத்தில் ஜப்பான் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். இந்த நிலையில், இன்று ஜி 7 மாநாட்டிற்கு இடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்த பிறகு இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை. இரு தலைவர்களும் கைலுக்கி பரஸ்பரம் சந்தித்து பேசும் புகைப்பத்தை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
உக்ரைன் அதிபரை சந்தித்து பேசிய பிறகு பிரதமர் மோடி கூறுகையில், " இன்று உலகம் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினை உக்ரைன் மீது நடத்தப்படும் போர்தான். இது வெறும் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினையாக மட்டும் நான் கருதவில்லை. இது மனிதகுலத்தின் பிரச்சினை. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவும் நானும் முடிந்ததை செய்வோம்.

கடந்த ஒரு வருடமாக நானும் ஜெலன்ஸ்கியும் பலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். கிளாஸ்கோ மாநாட்டிற்கு பிறகு நீண்ட காலம் கழித்து தற்போதுதான் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கிறோம்" என்றார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக இந்தியா இதுவரை நேரடியாக எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
சர்வதேச மன்றங்களில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மனங்களில் இந்தியா நடுநிலையே வகித்து வருகிறது. எனினும், உக்ரைனுக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தவறுவதில்லை. ரஷ்யா தாக்குதல் நடத்திய பிறகு குறைந்தது நான்கு முறையாவது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதேபோல், மனிதாபிமான உதவிகள் கோரியும் ஐநாவில் ஆதரவு அளிக்கக் கோரியும் கடந்த மாதம் பிரதமர் மோடிக்கு ஜெலன்ஸ்கி கடிதம் எழுதியிருந்தார்.












Click it and Unblock the Notifications