துப்பாக்கியுடன் ரஷ்ய வீரர்.. "உங்களுக்கு இங்க என்ன வேலை.." துணிச்சலாக கேட்ட உக்ரைன் "சிங்கப் பெண்"
கிவி: "உங்களுக்கு எங்கள் நாட்டில் என்ன வேலை?" என்று துப்பாக்கி ஏந்திய ரஷ்ய வீரரைக் கேள்வி கேட்ட பெண்ணுக்கு பாராட்டு குவித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி 24 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. 300க்கும் அதிகமான உயிரிழப்புகள் உக்ரைன் தரப்பில் நிகழ்ந்திருக்கிறது. பல சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. வான், கடல், தரை என அனைத்து விதத்திலும் உக்ரைனை தாக்கி வருகிறது ரஷ்யா.
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி சென்று கொண்டிருக்கிறார்கள். பலர் பதுங்கு குழிகளில் பத்திரமாக தங்கியுள்ளார்கள். இந்நிலையில் கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனில் தாக்குதல் அதிகமாக இருப்பதால், மேற்கு எல்லையை நோக்கி பலர் சென்று கொண்டிருக்கிறார்கள்.

உக்ரேனியர்கள்
உக்ரைனில் போர் ஆரம்பித்ததும், பலர் உக்ரைன் தலைநகரை விட்டு வெளியேறி வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் தற்போது மேற்கு உக்ரைனை நோக்கி செல்கின்றனர். ஆண்கள் குறிப்பாக 16 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் நாட்டைவிட்டு செல்லக்கூடாது, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. தலைநகரை விட்டு செல்ல முடியாதவர்கள் பதுங்கு குழிகளில் தங்கி வருகிறார்கள்.

உக்ரைன் பெண்
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து முன்னேறி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா ராணுவத்தினர் கைப்பற்றிய இடங்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ரஷ்ய ராணுவ வீரரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியுள்ளார் பெண் ஒருவர். அந்தப் பெண் சற்றும் அஞ்சாமல் ரஷ்ய வீரரிடம் வாதிடுவதை வழிப்போக்கர் ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர, அது தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவிட்டது.

ஏன் வந்தீர்கள்?
ஆயுதம் ஏந்திய ரஷ்ய வீரரைப் பார்த்து, "நீங்கள் யார்..பாசிசவாதிகளே... இங்கே உங்களுக்கு என்ன வேலை'' என்று அப்பெண் கேட்கிறார். அதற்கு ரஷ்ய வீரர், "நமது பேச்சால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் செல்லலாம்" எனக் கூறுகிறார். அப்போது அந்தபெண் "உங்கள் பாக்கெட்டில் கொஞ்சம் சூரியகாந்தி விதையைப் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீழ்த்தப்படும்போது அந்த விதையாவது வளரட்டும்" என்று கூறிச் செல்கிறார் அப்பெண். உக்ரைன் நாட்டின் தேசிய மலர் சூரியகாந்தி.
Recommended Video

பாசப் போராட்டம்
இதே போல் உக்ரைனில் இருந்து மற்றொரு வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவி நகரில் இருந்து, பெண்கள் குழந்தைகள் வெளியேறி வருகிறார்கள். அப்போது, தன்னுடைய மகளையும், மனைவியையும் வழியனுப்பும் தந்தையின் கண்ணீர் வீடியோ வைரலாகி வருகிறது. மகளை உச்சிமுகர்ந்து, 'மிஸ் யூ' என்று தன் ஒட்டு மொத்த பாசத்தையும் கட்டியணைத்து கண்ணீருடன் வெளிப்படுத்தியிருப்பார்.












Click it and Unblock the Notifications