தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை "சாஹிப்" என்று அழைத்தது தவறுதான்.. வருத்தம் தெரிவித்தது ஐ.நா.
ஐ.நா.: மும்பையில் பயங்கவாத செயலை நிகழ்த்திய கும்பலின் மூளையாக இருந்து செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா நிறுவரான தீவிரவாதி ஹபீ்ஸ் சயீத்தை சாஹிப் என்று மரியாதையாக விளித்தது தவறுதான் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வருத்தம் தெரிவித்துள்ளது.
மேலும் சயீத்தை சாஹிப் என்று மரியாதையாக விளித்து வெளியிட்ட கடிதத்தையும் அது திரும்பப் பெற்றுக் கொண்டு அந்த வார்த்தையை நீக்கிய புதிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், தீவிரவாதி சயீத்தை சாஹிப் என்று அழைத்து கடிதம் வெளியிட்டதற்கு முன்னதாக இந்தியா கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்.
ஆஸ்திரேலியாவின் ஐ. நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி கேரி குயின்லானைத் தலைவராகக் கொண்ட அல் கொய்தா தடை கமிட்டி, டிசம்பர் 17ம் தேதி வெளியிட்ட கடிதத்தில் சாஹிப் ஹபீஸ் சயீத் என்று கூறப்பட்டிருந்தது. இது இந்தியாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. ஒரு பயங்கரவாதிக்கு, மும்பையில் மிகப் பெரிய நாச வேலையை நிகழ்த்திய அமைப்பின் தலைவருக்கு மரியாதை கொடுப்பதா என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத செயல்கள் தொடர்பானவற்றை எப்படி மோசமாக அணுகி வருகிறது என்பதற்கு இது உதாரணம் என்றும் இந்தியா கூறியிருந்தது.
இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தனது தவறை திருத்திக் கொண்டுள்ளது, சாஹிப் என்ற பெயரை நீக்கிய கடிதத்தை அது வெளியிட்டுள்ளது. தவறுக்காக வருத்தமும் தெரிவித்துள்ளது.
லஷ்கர் இ தொய்பாவை நிறுவியவர்தான் சயீத். இந்த இயக்கத்திற்கு உலகளாவிய தடை வந்ததைத் தொடர்ந்து தனது அமைப்பின் பெயரை ஜமாத் உத் தவா என்று அவர் மாற்றினார். இந்த அமைப்புக்கும் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் சயீத்.
சயீத்துக்கும், அவரது மைத்துனரின் தலைக்கு கடந்த 2003ம் ஆண்டு 10 மில்லியன் டாலர் விலையை அறிவித்தது அமெரிக்கா. ஆனால் பாகிஸ்தானில் படு பத்திரமாக, சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சயீத். தொடர்ந்து விஷமத்தனமான பேச்சுக்களைப் பேசி வருகிறார். அறிக்கை விட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்கியும் வருகிறார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் குடிமகன். எனவே அவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.