தொழிலாளர் சட்டங்களை மறு சீரமைக்க கத்தார் அரசுக்கு ஐ.நா வலியுறுத்தல்
டோஹா: 2022ம் ஆண்டு கத்தார் நாட்டில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஐநா சபை எடுக்கவுள்ளது.
இதன் பொருட்டு 84 நாடுகளின் பிரநிதிகள் அடங்கிய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
கத்தாரில் இந்தியர்கள்:
கத்தாரில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலைமை மோசமாக இருப்பதாக ஐ.நா. மனித உரி்மைக் கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது. மேலும், கத்தார் அரசு தனது தொழிலாளர் நலச் சட்டங்களை மறு சீரமைக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
ஸ்பான்சர்ஷிப் முறை:
அதில் முக்கியமாக ஸ்பான்சர்ஷிப் முறையை அடியோடு ஒழிக்க ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த முறைப்படி, வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் பணியாற்றும் நிறுவன உரிமையாளர்களிடம் அடிமை போல இருக்கும் அவல நிலை இருப்பதாக மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கவுன்சில் கூட்டம்:
மேலும் கட்டுமானத் தொழிலாளர்கள்தான் பெருமளவில் பல்வேறு சிக்கல்களை, துயரங்களைச் சந்திப்பதாகவும் மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ளது. புதன்கிழமையன்று கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் இந்தக் கவலை தெரிவிக்கப்பட்டது.
சட்டத் திருத்தம் வேண்டும்:
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளுக்கு முன்பாகவே தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
பெண்களின் நிலைமை:
ஏற்கனவே ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் கூட கத்தாரில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பல்வேறு கஷ்டங்களில் இருப்பதாகவும், குறிப்பாக வீட்டுப் பணிப் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவதாகவும் கூறியுள்ளது நினைவிருக்கலாம்.
500 இந்தியர்கள் மரணம்:
2012 ஆம் ஆண்டில் மட்டும் கத்தாரில் 500 இந்தியத் தொழிலாளர்கள் மரணத்தைச் சந்தித்துள்ளதாக கார்டியன் செய்தித் தாளும் கட்டுரை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications