இந்தா வருது.. வடகொரியாவுக்கு ஆப்பு வைக்க அமெரிக்கா கொண்டு வரும் அதிநவீன ஆயுதம்!
ஏவுகணைகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் அதிநவீன எதிர் ஏவுகணையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது..
வாஷிங்டன்: ஏவுகணைகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் அதிநவீன எதிர் ஏவுகணையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. வடகொரியாவின் மிரட்டல்களுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் இந்த நவீன எதிர் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனாலும் எதற்கும் அசராத வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து எதிரியின் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறார்.

சீண்டும் வடகொரியா
ஏவுகணை சோதனையை வடகொரியா கைவிட வேண்டும் என்பதற்காக அமெரிக்கா பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு குடைச்சல்களை கொடுத்தது. ஆனாலும் அலட்டிக் கொள்ளாத வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய கையோடு இதுதான் அமெரிக்காவுக்கான சுதந்திர தின பரிசு எனக்கூறி சீண்டியது.

உச்சக்கட்ட போர் பதற்றம்
அமெரிக்காவையும் அதன் அண்டை நாடுகளையும் பாதுகாக்க முழு திறனையும் பயன்படுத்த தயார் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூறியது அமெரிக்கா. இதனால் அமெரிக்கா வடகொரியா இடையேயான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.

ஏவுகணைகளை அழிக்கும் ஏவுகணை
இந்நிலையில் வடகொரியாவின் கொட்டத்தை அடக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் உடைய ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் எதிர் ஏவுகணையை அமெரிக்கா தயாரித்துள்ளது.

வடகொரியாவுக்கு பதில்
தாட் என்ற இந்த புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்ட அந்த ஏவுகணை விரைவில் சோதனை செய்யப்பட உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இந்த ஏவுகணை வடகொரியாவின் பூச்சாண்டிக்கு சிறந்த பதிலாக இருக்கும் என்றும் அமெரிக்கா கருதுகிறது.

விரைவில் சோதனை
அலஸ்காவில் உள்ள பசிபிக் விண்வெளித்தளத்தில் இந்த சோதனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வகை எதிர்-ஏவுகனைகள் குறுகிய, நடுத்தர மற்றும் இடைநிலை ஏவுகணைகளை தாக்கி வீழ்த்த பயன்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications