மலேசியாவிலும் UPI அறிமுகம்.. தமிழர்கள் உள்பட இந்தியர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன குட்நியூஸ்
கோலாலம்பூர்: இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையேயான உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் தான் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று மலேசியா சென்றார். அங்கு மலேசியா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும்போது, ‛‛ மலேசியாவில் விரைவில் யுபிஐ பணப்பரிமாற்றம் அறிமுகப்படுத்தப்படும்'' என்று உறுதியளித்தார்.
பிரதமர் மோடி இன்று மற்றும் நாளை என்று 2 நாள் அரசு முறை பயணமாக மலேசியா சென்றுள்ளார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேரில் சென்று வரவேற்றார். பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் காரில், பிரதமர் மோடி ஒன்றாக பயணித்தார். மலேசியாவில் தமிழர்கள் உள்பட அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் தான் மலேசிய வாழ் இந்தியர்களுக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு மோடி மோடி என கோஷமிட்டு வரவேற்பு வழங்கப்பட்டது. 800 நடன கலைஞர்கள் நடனமாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ‛‛கடந்த ஆண்டு ஆசியான் உச்சி மாநாட்டில் மலேசியாவுக்கு என்னால் வர முடியவில்லை. விரைவில் வருவேன் என்று என் நண்பர் அன்வர் இப்ராஹிமிடம் உறுதி அளித்து இருந்தேன். அதன்படி இப்போது வந்துவிட்டேன். இது 2026 ஆம் ஆண்டின் எனது முதல் வெளிநாட்டுப் பயணம்.
இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை (OCI) பெறுவதற்கான தகுதி ஆறாவது தலைமுறை வரையிலான மலேசிய இந்தியர்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.
இந்தியா எப்போதும் மலேசியா மக்களை அரவணைக்கும். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு 'திருவள்ளுவர் கல்வி உதவித்தொகை' வழங்கப்படும். 'இந்தியாவை அறிவோம்' என்ற திட்டத்தில் அனைவரும் மலேசியர்களை இந்தியாவின் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து வர வேண்டும். இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிமாற்றத் தளமான யுபிஐ (UPI) விரைவில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
2026ம் ஆண்டில் பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும். இருநாடுகளுக்கு இடையேயான உறவு வலுவானது. ஒவ்வொரு ஆண்டும் இருநாடுகள் இடையேயான உறவு வலுப்பெற்று வருகிறது. இதற்கு முன்பு இந்தியா என்பது பெரிய மார்க்கெட்டாக தான் இருந்தது. இப்போது முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான ஹப்பாக இந்தியா உள்ளது. வளர்ச்சிக்கான நம்பிக்கைக்குரிய பார்ட்னராக இந்தியா உள்ளது'' என்று பேசினார்.
இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியும், மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிமும் இருநாடுகளின் உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் பற்றி பேச உள்ளனர். அதேபோல், இந்தியா - மலேசியா சிஇஓ ஃபாரின் 10வது மீட்டிங் நடைபெற உள்ளது. அதிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications