விமானத்தில் ஒரு இடத்தில் உட்காராமல் யோகா செய்து அலப்பறையைக் கொடுத்த 'குடுகுடு' தாத்தா!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து ஜப்பான் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர், யோகா செய்ய வேண்டும் என ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் அவசரமாக ஹோனோலுலுவில் தரையிறக்கப்பட்டு, அந்த பயணி கைது செய்யப்பட்டார். அவர் ஒரு குடுகுடு தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.
யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவின் தலைநகர் ஹோனோலுலுவில் இருந்து ஜப்பான் நாட்டில் உள்ள நரிட்டா நகருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்த 72 வயது ஹயாங்டே பே என்ற பயணி, தனது இருக்கையில் அமர மறுத்து ரகளையில் ஈடுபட்டார். அதோடு, விமானத்தின் பின்பகுதிக்குச் சென்ற அவர், யோகா மற்றும் தியானம் செய்யப்போவதாகவும் கூறினார்.
விமானத்தில் அவ்வாறெல்லாம் செய்யக்கூடாது என அவரது மனைவியும், விமானப் பணிப்பெண்களும் எடுத்துக் கூறினர். ஆனால், அவர் சமாதானம் ஆகவில்லை.
வேடிக்கை பார்த்த பயணிகளையும் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியதால், விமானத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறைக்கு நிலைமையை விளக்கிய விமானி, மீண்டும் விமானத்தை ஹோனோலுலுவுக்கே திருப்பினார்.
அங்கு விமானம் தரையிறங்கியதும் போலீசாரால் ஹயாங்டே கைது செய்யப்பட்டார். பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் தாமதமாக மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
கைது செய்யப்பட்ட ஹயாங்டே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்த நீதிபதி, அவர் ஓஹூ தீவில்தான் தங்கி இருக்க வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார்.
ஹயாங்டே தென்கொரியாவை சேர்ந்தவர் என்றும், தன் மனைவியுடன் 40-வது திருமண நாளை கொண்டாடுவதற்கு ஹவாய் வந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், 88 பேர் பயணம் செய்த எகிப்து விமானத்தை, பயணி ஒருவர் போலி வெடிகுண்டு பெல்டைக் காட்டி மிரட்டி கடத்தினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், விமானத்தில் யோகா செய்வதாகக் கூறி பயணி ஒருவர் ரகளை செய்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications