இந்தியாவிற்கு மிக அருகில்! வங்கதேச எல்லையில் களமிறங்கிய அமெரிக்க போர் கப்பல்கள்! டிரம்ப் மெகா பிளான்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய அதிகார மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவும் வங்காளதேசமும் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகின்றன. இந்த அதிரடி ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவின் கடற்படைப் போர்க்கப்பல்கள் வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) நேரடியாக நிலைநிறுத்தப்பட அனுமதி வழங்கப்படவுள்ளது. அதாவது இந்தியாவிற்கு அருகில் அமெரிக்காவின் போர் கப்பல்கள் நிறுத்தப்படும் .

இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துறைமுகங்களை பயன்படுத்த அனுமதி

இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் தங்களின் பராமரிப்பு, எரிபொருள் நிரப்புதல் (Maintenance, Refuelling, Resupply) போன்ற தேவைகளுக்காக வங்காளதேசத்தின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அமெரிக்கா இதற்காக மட்டும் அந்த துறைமுகங்களை பயன்படுத்தும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, வங்காளதேசத்தின் முக்கிய வணிகத் துறைமுகங்களான சிட்டகாங் (Chittagong) மற்றும் மாதார்பாரி (Matarbari) ஆகிய துறைமுகங்கள் இந்த இராணுவக் கூட்டுறவில் மிக முக்கியப் பங்கு வகிக்கப் போகின்றன.

US-Bangladesh Defense Deal US Navy Warships to Deploy in Bay of Bengal India Raises Concerns

இவற்றுடன் இரு நாடுகளுக்கும் இடையே உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் (Intelligence-sharing) ஒத்துழைப்பும் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த வங்காள விரிகுடா பகுதியையும் அமெரிக்காவால் கண்காணிக்க முடியும்.

இந்தியாவின் கவலை என்ன?

வரலாற்று ரீதியாகவே வங்காளதேச கடற்படை இப்பிராந்தியத்தில் வலுவான ஒன்றாகக் கருதப்பட்டாலும், வங்காள விரிகுடா பகுதியில் இந்தியாவின் கடற்படை ஆதிக்கமே இதுவரை முதன்மையாக இருந்து வருகிறது. இப்பகுதியில் இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளம் (Nuclear Submarine Base) உட்பட பல முக்கிய கடற்படைத் தளங்கள் அமைந்துள்ளன.

பல தசாப்தங்களாக உலக நாடுகளின் கடற்படைப் போட்டிகள் அல்லது மோதல்கள் இல்லாத அமைதியான பகுதியாக விளங்கிய வங்காள விரிகுடாவிற்குள், தற்போது உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்கா நேரடியாகக் கால்பதிப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு புதிய சவால்களை ஏற்படுத்தக்கூடும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வர்த்தக ஒப்பந்தமும் அமெரிக்காவின் நிபந்தனையும்

கடந்த மே 5 முதல் 7 வரையிலான தேதிகளில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலக அதிகாரிகள் டாக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே கையெழுத்தான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை (Agreement on Reciprocal Trade - ART) செயல்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, வங்காளதேசத்தின் ஆடை ஏற்றுமதிக்கான அமெரிக்க இறக்குமதி வரி 19 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி மற்றும் செயற்கை இழைகளைப் பயன்படுத்தி வங்காளதேசத்தில் தயாரிக்கப்படும் குறிப்பிட்ட ஆடைகளுக்கு பூஜ்ஜிய சதவீத (Zero Tariff) வரி சலுகையும் வழங்கப்படுகிறது.

இருப்பினும், இந்த பொருளாதாரச் சலுகைகளைத் தொடர வேண்டுமானால், அமெரிக்கா முன்வைத்துள்ள இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் வங்காளதேசம் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 15 ஆண்டுகால வியூகத் திட்டத்தில், அமெரிக்காவின் பாதுகாப்பு உபகரணங்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் ரசாயனங்களை வங்காளதேசம் அதிகளவில் இறக்குமதி செய்வதும் அடங்கும்.

சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்படுமா?

இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தில் இந்தியா மற்றும் சீனாவின் செல்வாக்கை நேரடியாகப் பாதிக்கும். வங்காளதேசம் இதுவரை தனது துறைமுகக் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு சீனாவையே பெரிதும் நம்பியிருந்தது. வங்காளதேசத்தின் ஒட்டுமொத்த ஆயுதத் தேவையில் சுமார் 70 சதவீதம் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்காவின் நுழைவு வங்காளதேசத்தின் வெளியுறவுக் கொள்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

முன்னதாக, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வங்காள விரிகுடாவில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் மார்ட்டின் தீவில் (St Martin's Island) அமெரிக்கா தனது இராணுவத் தளத்தை அமைக்கத் தன்னிடம் அழுத்தம் கொடுத்ததாகவும், அதற்குத் தான் மறுப்பு தெரிவித்ததே தனது அரசியல் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும் அமெரிக்கா இந்தக் குற்றச்சாட்டுகளைப் பொய் என்று மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் இந்த புதிய நகர்வு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் அண்டை வீட்டிலேயே அமெரிக்கா தனது ராணுவ இருப்பை நிலைநிறுத்துவது தெற்காசிய அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+