அமெரிக்க கால் சென்டர் மோசடி வழக்கு.. குற்றத்தை ஒப்புக்கொண்ட 4 இந்தியர்கள்
வாஷிங்டன்: கால் சென்டர் மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 4 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல்வேறு இடங்களில் கால் சென்டர்களை நடத்தி, அதன்மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜுபாய் படேல், விராஜ் படேல், திலீப்குமார் அம்பல் படேல், ஹார்திக் படேல் ஆகிய 4 இந்தியர்களும், பஹத் அலி என்ற பாகிஸ்தானியரும் அமெரிக்காவில் கடந்த 2016 அக்டோபரில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கால் சென்டர்கள் மூலம் அமெரிக்கர்களை தொடர்புகொண்டு, புதிய திட்டம் ஒன்றை கூறி, பணம் வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் டெக்சாஸ் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜூன் 2ஆம் தேதி ஹார்திக் படேல் என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மற்ற 3 இந்தியர்களும், ஒரு பாகிஸ்தானியரும் தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களுக்காக தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.