அமெரிக்கா vs சீனா மோதல்! இந்தியா எங்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? இதை செஞ்சா போதும்
டெல்லி: அமெரிக்கா-சீனாவின் வர்த்தக போர் இந்தியாவை பாதிக்கும் சூழல் எழுந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். இந்த பிரச்சனையிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள இருக்கும் வழி என்ன? என்பது பற்றியும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் அமெரிக்கா மற்றும் சீன பொருட்களின் ஆதிக்கம் நிறைந்து இருக்கிறது. தற்போது இந்த இரண்டு நாடுகளும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்வதால் அது உலக பொருளாதாரத்தை பாதிக்க தொடங்கியிருக்கிறது.

இந்தியாவுக்கு என்ன பிரச்சனை:
இந்தியா வளர்ந்து வரும் நாடு. பொருட்கள் உற்பத்திக்கான கட்டமைப்புகள் இன்னும் முழுமையாக நவீனப்படுத்தப்படவில்லை. மட்டுமல்லாது இங்கு தொழிலாளர் சக்தியை ஒருங்கிணைப்பதில் சிக்கல் இருக்கிறது. கூலி விஷயத்தில் நிறுவனங்கள் காட்டும் கறார் தன்மை, தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கிறது. எனவே, தொழிலாளர்கள் தங்கள் உழைப்பை உற்பத்தியில் முழுமையாக செலுத்தாதவர்களாக இருக்கின்றனர்.
என்ன பாதிப்பு ஏற்படும்?
இந்தியாவில் சராசரியாக ஒரு தொழிலாளர், ஓர் ஆண்டுக்கு சராசரியாக ரூ.7,35,800 மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்கிறார். சீன தொழிலாளர்கள் ரூ.23.37 லட்சம் அளவுக்கு உற்பத்தி செய்கிறார்கள். சீனா உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைதான் நம்மால் செய்ய முடிகிறது. போதுமான பயிற்சி இல்லாதது, அதிக வேலை நேரம், டெக்னாலஜியை முழுமையாக பயன்படுத்தாதது போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கின்றன.
சிறு குறு தொழில்களுக்கு பாதிப்பு
ஆக உற்பத்தி குறைவாக உள்ள இந்தியாவுக்கு சீனா பொருட்கள் படையெடுக்கும் அபாயம் இயல்பாகவே இருக்கிறது. இப்போது அமெரிக்கா-சீனா வர்த்தக போர் தொடங்கியுள்ளதால் இந்த அபாயம் முன்னெப்போதைவிடவும் அதிகரித்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது சீனாவின் பொருட்களை அமெரிக்காதான் அதிகம் வாங்கி வருகிறது. வரி காரணமாக இந்த வியாபாரம் தடைபடும். எனவே தேங்கி வைத்த பொருட்களை எங்கு கொண்டு செல்வது? இப்படி தேடினால் இந்தியாதான் பக்கத்திலேயே இருக்கிறதே, என சீனா யோசிக்க தொடங்கிவிடும். சீனாவில் உற்பத்தி செலவு குறைவு என்பதால், பொருட்களின் விலையும் குறைவாகத்தான் இருக்கும். இப்படியான பொருட்கள் இந்திய சந்தையை பிடித்தால் என்ன ஆகும்?
சீனாவின் ஆதிக்கம்
ஏற்கெனவே சிகிரெட் லைட்டர் தொடங்கி மருத்துவ உபகரணங்கள் வரை சீன தயாரிப்புகள்தான் இருக்கின்றன. அப்படியெனில் வரும் நாட்களில் இந்த நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
குறிப்பாக இந்தியாவின் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களை சீன பொருட்களின் ஆதிக்கம் அழித்துவிடும். உதாரணத்திற்கு சீனாவிலிருந்து லைட்டர் இறக்குமதி அதிகமானால் சிவகாசியிலிருந்து தீப்பெட்டி உற்பத்தி அடிவாங்கும். அங்குள்ள சிறுகுறு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இது சிறிய உதாரணம்தான். இப்படி ஒவ்வொரு பொருட்களிலும் சீனாவின் ஆதிக்கம் இருந்தால், இந்தியாவின் சிறுகுறு தொழில்கள் அழிந்துவிடும்.
சிறு குறு தொழில்களின் பலம்
இந்தியாவுக்கு MSMEs செக்டார் மிக அவசியம். நாட்டில் 11 கோடி பேருக்கு இந்த துறைதான் வேலைவாய்ப்பை கொடுக்கிறது. வேலைவாய்ப்பை அதிகம் வழங்கும் துறையில் முதல் இடத்தில் வேளாண்துறையும், இரண்டாவது இடத்தில் MSMEs செக்டாரும் இருக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% வரை வழங்குகிறது. ஏற்றுமதியில் 45% வரையும் பங்காற்றுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த துறையை சீன பொருட்கள் அழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் நமக்கு இருக்கும் சவால்.
இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே! சீனா பொருட்களை நாம் எப்படி தடுக்கலாம்? உங்களுக்கான யோசனையையும் கூறுங்கள்.












Click it and Unblock the Notifications