"போக்கிமோன் கோ" கேம் மோகம்.. 2 வயது குழந்தையை தனியாக தவிக்கவிட்டுச் சென்ற தம்பதி கைது
லாஸ் ஏஞ்சல்ஸ்: போக்கிமோன் கோ விளையாடுவதற்காக 2 வயது குழந்தையை வீட்டில் தனியாக தவிக்கவிட்டுச் சென்ற அமெரிக்க தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
உலகமெங்கும் அனைவராலும் விரும்பி விளையாடப்பட்டுக் கொண்டிருக்கும் போக்கிமேன் கோ வீடியோ கேம்ஸ், ஒரு ஜாலியான விளையாட்டு தான். இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், வெறும் விளையாட்டாக இல்லாமல் பலரை அடிமையாக்கி விடுகின்றது. அனைவருடைய எண்ணத்தையும் போதையாக்கி கற்பனை உலகிற்கு கொண்டு செல்லும் இந்த போக்கிமோன் கோ.
ஏற்கனவே போக்கிமோன் கோ விளையாட்டு பல சாலை விபத்துகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் போக்கிமோன் கோ விளையாடுவதற்காக 2 வயது குழந்தையை தனியாக தவிக்கவிட்டு சென்ற தம்பதியை போலீசார் கைது
செய்துள்ளனர்.
சான் டான் பள்ளத்தாக்கை சேர்ந்த ப்ரெண்ட் டாலே (27), மற்றும் சாண்ராவின் டாலே (25), தங்களது 2-வயது மகனை, வீட்டில் இரவு 10.30 மணிக்கு வெப்பம் மிகுந்த சூழ்நிலையில் 90 நிமிடங்கள் தண்ணீர் இல்லாமல் தனியாக விட்டுவிட்டு, போக்கிமோன் கோ விளையாடுவதற்காக காரில் சென்றுவிட்டனர்.
பெற்றோர் இல்லாத நிலையில் குழந்தை தொடர்ந்து அழுதபடி வீட்டை விட்டு வெளியே வர முயற்சித்துள்ளது. இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டுள்ளனர்.
பின்னர், போக்கிமோன் கோ விளையாடுவதற்காக குழந்தையை தனியாக விட்டு சென்ற தம்பதிகளை போலீசார் கைது செய்தனர்.