அமெரிக்கா: பாட்டி, பேத்தியை படுகொலை செய்த இந்தியருக்கு மரண தண்டனை
பென்சில்வேனியா: அமெரிக்காவில் பத்து மாத குழந்தையையும், அவரது பாட்டியை கொலை செய்துவிட்டு குழந்தையை கடத்திக் கொன்ற இந்தியருக்கு பென்சில்வேனியா நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் வெங்கட கொண்டரிசிவா. இவர் அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலம் மாண்ட் கோமெர்ரி நகரில் தனது மனைவி லதா பனுருவுடன் வசிக்கிறார். இவர்களது 10 மாத குழந்தை சான்வி வென்னா. தனது பேத்தி சான்வியை பராமரிக்க வெங்கட கொண்டாவின் தாயார் சத்யவதி வென்னா (61) கடந்த 2012ஆம் ஆண்டு ஜுலை மாதம் அமெரிக்கா சென்றார்.
2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மகனும், மருமகளும் வேலைக்குச் சென்றுவிட்டதால், சத்யவதி வென்னா தனது பேத்தியுடன் குடியிருப்பில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் சான்வியை கடத்த முயன்றது. அதை தடுத்த சத்தியவதியை கொலை செய்து விட்டு குழந்தை சான்வியை கடத்தி சென்று விட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர்.
குழந்தையும் கொலை
இந்த நிலையில் கடத்தப்பட்ட குழந்தை சான்வி வென்னாவும் படுகொலை செய்யப்பட்டாள். அவளது உடல் சாண்டியா கோவில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தின் அடி தளத்தில் உள்ள பாத்ரூமில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பணம் கேட்டு மிரட்டல்
இது தொடர்பாக வெங்கட கொண்ட சிவாவின் குடும்ப நண்பர் ரகுநந்தன் யந்தாமுரி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது கொலை, கடத்தல், கொள்ளை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தை சான்வியை கடத்திய நபர் யந்தாமுரி ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பிய செய்தியில், பெற்றோரின் செல்லப் பெயர்களைச் சொல்லி பணம் கேட்டிருந்தார்.
குடும்ப நண்பர் கைது
இதையடுத்து, வெங்கட வென்னா மற்றும் செஞ்சு லதா ஆகியோரிடம், அவர்களது செல்லப் பெயர்களை அறிந்தவர்களின் பட்டியல் பெறப்பட்டது. இதில் மற்ற அனைவரும் இந்தியாவில் இருக்க, ஒரே ஒருவர் மட்டுமே அமெரிக்காவில் இருந்தார்.அவர்தான் ரகுநந்தன் யந்தாமுரி. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர்தான் சத்யாவதி வென்னாவைக் கொன்று குழந்தையைக் கடத்திச் சென்றதும், குழந்தை அழுததால், வாயில் துணியை அடைத்து சூட்கேசில் மூடி வைத்ததாக தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
மரணதண்டனை
இந்த கொலை வழக்கு பென்சில்வேனியா நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமையன்று யந்தாமுரி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். பச்சிளம் குழந்தையையும், பாட்டியையும் கொடூரமாக கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதை அடுத்து ரகுநந்தன் யந்தாமுரிக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி செவ்வாய்கிழமை தீர்ப்பளித்தார்.