இந்திய மாணவர்களே! அமெரிக்க விசா, கிரீன் கார்டு வேணும்னா இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க
வாஷிங்டன்: இந்தியா போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவில் படிப்பதற்கு மாணவர்கள் அதிக அளவில் செல்கின்றனர். இப்படி போகும் மாணவர்களுக்கு விசா மற்றும் கிரீன் கார்டு கிடைக்க வேண்டும் எனில், அவர்கள் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
அதாவது சமீப காலமாக அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்தன. பல்கலைக்கழகங்களில்தான் இந்த போராட்டம் தீவிரமாக இருந்தது. இதை குறைக்க அந்நாட்டு அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

அதன்படி, இனி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சோஷியல் மீடியாக்களில் பதிவிடும் மாணவர்களுக்கு விசா ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. சிரியாவை சேர்ந்த, அல்ஜீரிய குடியுரிமை பெற்ற மக்மூத் கலீல் எனும் மாணவர் கடந்த 2022ம் ஆண்டு மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு வந்திருந்தார். இவர் இடையில் கிரீன் கார்டு அப்ளை செய்திருந்தார்.
இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு தலைமையேற்றிருந்தார். இதனையடுத்து அவருடைய கிரீன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது அவர் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்.
இது பற்றி அமெரிக்க உள்துறை ஊடகப் பிரிவு அதிகாரி ட்ரிஷா மெக்லாஃப்லி கூறுகையில், "தீவிரவாத ஆதரவாளர்களுக்கு இங்கு இடம் கிடையாது. யூதர்களுக்கு எதிராக பேசுவோர்கள் இங்கு வர வேண்டாம்" என்று கூறியுள்ளார். பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கான விசா மற்றும் கிரீன் கார்டு வழங்கும் சேவையை ரத்து செய்ய அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை (USCIS) தொடங்கியிருக்கிறது. சோஷியல் மீடியாக்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பதிவிட்டிருந்தாலும் கூட விசா கிடைக்காது.
ஹமாஸ், பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிஹாத், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹைவுதி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா, தீவிரவாதிகளாக வகைப்படுத்தியுள்ளது. எனவே இவர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களை தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்களாக அமெரிக்கா பார்க்கிறது. இந்தியாவிலிருந்து சுமார் 3.31 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருந்தால்தான் அவர்களால் கல்வியை தொடர முடியும்.
அமெரிக்க கல்வி நிலையங்களில் அரசியல் போராட்டங்கள் நடப்பது புதிதல்ல. தி இந்து ஆங்கில ஊடகத்தின் ஆசிரியரான என்.ராம், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது அங்கு நடந்த அரசியல் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டார். அதாவது 1968ல் வியட்நாம் மீதான அமெரிக்கவின் போரை கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் உலகம் முழுவதும் கவனம் பெற்றது.
இப்படி அமெரிக்க கல்வி நிலையங்கள் ஜனநாயகப்பூர்வமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால், இடையில் டிரம்ப் போன்ற ஆட்கள் வந்த பின்னர் கருத்து சுதந்திரத்திற்கே பேராபத்து ஏற்பட்டிருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications