அமெரிக்காவுக்கு வயித்தெரிச்சல்..ரஷ்யாவால் ’பல்க்’ லாபம் பார்க்கும் இந்தியா! கொட்டித் தீர்த்த பெசண்ட்
நியூயார்க்: அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கும் நிலையில் ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆதரவாக திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயால் இந்தியா லாபம் ஈட்டுவதாகவும், தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் உள்ளிட்டவற்றை விற்று லாபம் பார்க்கும் இந்தியாவின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்கா விமர்சித்து இருக்கிறது.
உக்ரைன் போரின் பின்னணியில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதித்துள்ளன. எனினும், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவது அமெரிக்காவை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், இந்தியா மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து மறுவிற்பனை செய்யும், இந்தியாவின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா ரஷ்யா எண்ணெய்
மேலும், "ரஷ்யாவிலிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. பின்னர் அதனை சுத்திகரித்து சர்வதேச சந்தையில் மறுவிற்பனை செய்து லாபம் ஈட்டுகிறது. இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவுடன் இவ்வாறு வணிகம் செய்வது உலகளாவிய பொருளாதாரத் தளர்வை பாதிக்கும் ஆபத்தான நடைமுறை" என அவர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா வரி எச்சரிக்கை
பெசென்ட் இந்தியாவை விமர்சிப்பது இதுவே முதல் முறை அல்ல. கடந்த வாரம் அளித்த பேட்டியிலும், "அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் டொனால்ட் ட்ரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், இந்தியா மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும்" என எச்சரித்தார். இதன்மூலம் மீண்டும் மீண்டும் இந்தியா குறிவைக்கும் பெசென்ட் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து இந்தியாவை ரஷ்ய எரிசக்தி வர்த்தகத்திற்காக குறிவைத்து வரும் அவர், அமெரிக்காவின் அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே 50% இறக்குமதி வரி விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் மருந்துகள், இரசாயனப் பொருட்கள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் போன்றவற்றுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்திய பொருளாதாரம்
அதே நேரத்தில் இந்திய அரசு, ரஷ்ய நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி வருகிறது. "நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் தான் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. இந்தியா தனது சொந்த நலன்களையும், மக்களின் நலன்களையும் முன்னிலைப்படுத்தியே நடவடிக்கை எடுக்கிறது" என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் பல முறை சொல்லியும் அமெரிக்க அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
அமெரிக்கா
இந்நிலையில், அமெரிக்கா தனது தடைகளை மேலும் கடுமைப்படுத்தினால், இந்தியாவின் வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக, ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவுகள், எரிபொருள் விலை ஆகியவை நேரடியாக பாதிக்கப்படக்கூடும் என்பதால், வருங்காலத்தில் இந்த விவகாரம் பெரிய சர்வதேச சர்ச்சையாக மாற வாய்ப்பு அதிகமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications