அமெரிக்காவில் கோவில் சுவரில் அவதூறு வாசகம்.. இந்துக்கள் அதிர்ச்சி!
வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள மிகப் பெரிய இந்துக் கோவிலின் சுவரில் ஸ்வஸ்திக் சின்னத்தைப் பொறுத்தும், வெளியேறு என்ற வாசகத்தையும் பொறித்து சிலர் அவதூறு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் வாழும் இந்துக்களும், இந்தியர்களும் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து இதுகுறித்து விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சியாட்டில் மெட்ரோபாலிடன் பகுதியில் உள்ள இந்தக் கோவிலின் சுவற்றில் கெட் அவுட் என்ற வாசகத்தை சில விஷமிகள் எழுதியுள்ளனர். வட கிழக்கு அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய இந்துக் கோவில்களில் ஒன்றாகும் இது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஸ்னோஹோமிஷ் கவுன்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வாஷிங்டனைச் சேர்ந்த இந்துக் கோவில்கள் மற்றும் கலாச்சார மையத்தின் அறங்காவலர் குழு தலைவரான நித்யா நிரஞ்சன் கூறுகையில், இது அமெரிக்கா போன்ற நாடுகளில் விரும்பத்தக்க விஷயமில்லை. இது நடந்திருக்கக் கூடாது. வெளியேறு என்று யாரும், யாரையும் சொல்ல முடியாது. இது பல்வேறு இனக்குழுக்கள், இடம் பெயர்ந்து வந்தோர் நாடாகும்.
இதை யார் செய்தது என்பது தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இதேபோல சிலர் எழுதினர். ஆனால் அப்போது அதுகுறித்து போலீஸில் புகார் தரப்படாமல் விட்டு விட்டனர். இப்போது செய்திருப்பது யார் என்று தெரியவில்லை என்றார் அவர்.
இந்தக் கோவில் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இதன் 2வது கட்ட கட்டுமானப் பணிகள் சமீபத்தில்தான் தொடங்கின என்பது நினைவிருக்கலாம். இந்த சம்பவத்திற்கு இந்து அமெரிக்க பவுண்டேஷன் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இந்துக் கோவில்கள் அவமரியாதை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு விர்ஜீனியாவின் லெளடன் கன்ட்ரி, ஜார்ஜியாவின் மன்ரோ ஆகிய நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன.
அதேபோல ஹூஸ்டனில் கடந்த வாரத்தில் ஒரு மசூதி தாக்குதலுக்குள்ளானது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications