யார் அதிபரானா என்ன... எங்களுக்கு மெயின் வில்லன் அமெரிக்காதான்... விளாசும் வட கொரிய அதிபர்
பியோங்யாங்: யார் அதிபராகப் பதவியேற்றாலும் அமெரிக்கா தான் தங்கள் முதல் எதிரி என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன் இன்னும் சில நாட்களில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ளார். அவருடன் கமலா ஹாரிஸும் துணை அதிபராக பதவியேற்கவுள்ளார்.
ஜோ பைடனின் வெற்றி நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அதிபராகப் பதவியேற்ற பின் சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா அணுகும் முறை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா தான் எதிரி
இது குறித்து வட கொரியா அதிபர் கிம் ஜாங் கூறுகையில், "நமது புரட்சிக்கு மிகப்பெரிய தடையாகவும், நமது மிகப்பெரிய எதிரியாகவும் இருக்கும் அமெரிக்காவை வீழ்த்துவதில் நாம் கவனம் செலுத்தி, செயல்பட வேண்டும். அந்நாட்டில் யார் அதிபராக வருகிறார்கள் என்பது முக்கியமல்ல. அந்நாட்டின் அடிப்படை கொள்கை வட கொரியாவுக்கு எதிராகவே உள்ளது. அது மாறாது" என்று தெரிவித்தார். வட கொரியாவின் அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை அறிவிக்கும் மாநாட்டில் கிம் ஜாங் இதைக் குறிப்பிட்டார்.
டிரம்பும் கிம்மும்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அதிபராக டிரம்ப் முதலில் பதவியேற்றபோது, கிம் ஜாங்கிற்கு எதிராக டிரம்ப் பல கருத்துகளைக் கூறினார். அதற்கு கிம்மும் பதிலடி கொடுத்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், டிரம்பும் கிம்மும் சந்தித்துக்கொண்டர். அதைத்தொடர்ந்து வட கொரியா மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அமெரிக்காவிடம் இருந்து பாதுகாக்கவே
பல சர்வதேச பொருளாதாரத் தடைகள் இருந்தாலும்கூட வட கொரிய பல அணு ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. வட கொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், தங்களைத் தற்காத்துக்கொள்ளவே இந்த அணு ஆயுதங்கள் என்று கிம் விளக்கமளித்தார்.
அணு ஆயுதம் அதிகம் வேண்டும்
மேலும், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலுக்கான புதிய ஆராய்ச்சி முடிவடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அணுசக்தி தொழில்நுட்பத்தில் மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சிறிய மற்றும் இலகுரக அணு ஆயுதங்களை வட கொரியா அதிகம் உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.
அமெரிக்காவை அழிக்கலாம்
வட கொரியாவிடம் தற்போது பல வகையான அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்காவின் எந்தப் பகுதியிலும் வட கொரியாவால் நொடிப்பொழுதில் அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ள முடியும்.