அமெரிக்காவில் தர்பூசணி பழத்தை கத்தியால் ஓங்கி குத்தியவர் கைது
நியூயார்க்: அமெரிக்காவில் தர்பூசணியை கத்தியால் குத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் கனக்டிகட் மாநிலத்தில் உள்ள தாமஸ்டனைச் சேர்ந்தவர் கார்மைன் செர்வெல்லினோ(49). அவர் ஒரு பிளாஸ்டிக் பையில் போதைப் பொருள் வைத்திருந்ததாக பெண் ஒருவர் கடந்த 4ம் தேதி போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் வந்து பார்த்தபோது அவரிடம் போதைப் பொருள் இல்லை. அந்த பெண்ணுக்கும் கார்மைனுக்கும் ஆகாது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கார்மைன் ஒரு தர்பூசணிப் பழத்தை இறைச்சியை வெட்டும் கத்தியால் குத்தியுள்ளார். மேலும் கத்தியை பழத்தின் மீது குத்தி அதை சமையல் அறையில் வைத்துள்ளார். இதை பார்த்த அந்த பெண் கார்மைன் வெறித்தனத்தோடு தான் பழத்தில் கத்தியை குத்தியிருக்கிறார் என்றும், அவர் தன்னை மிரட்டவே இவ்வாறு செய்துள்ளார் என்றும் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் கார்மைனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ரூ. 30 ஆயிரம் பணம் செலுத்தி வெளியே வந்தார்.
ஒரு தர்பூசணியை கத்தியால் குத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டது பலரையும் வியக்க வைத்துள்ளது.