நாய் கடி.. 2,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 டாலர்...
நியூயார்க்: அமெரிக்காவில் நாய்க்கடியால் அவதிப்பட்ட மனிதர் ஒருவர் தான் பட்ட வேதனைகளுக்கு ஈடாக கோடிக்கணக்கில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மன்காட்டன் நகரை சேர்ந்த ஆன்டன் புரிசிமா (62) என்பவர் சம்பவத்தன்று லா கார்டியா விமான நிலைய பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது சீனத்தம்பதி ஒன்று அழைத்து வந்த நாய் ஒன்று எதிர்பாராதவிதமாக இவரைக் கடித்து விட்டது.
நாய்க்கடியின் விளைவாக ஆண்டனுக்கு ரேபிஸ் நோய்த் தாக்குதல் உண்டானது. இதற்காக இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றார் ஆண்டன்.
நாய்க்கடியால் தான் அடைந்த வேதனைகளுக்கு நஷ்ட ஈடு கேட்டு, ஆண்டன் தற்போது மன்காட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், தான் சிகிச்சை பெற்ற 2 ஆஸ்பத்திரிகள் மற்றும் நாய் உரிமையாளர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார் ஆண்டன்.
நாய்க்கடிக்கு இவ்வளவு பெரிய தொகை நஷ்ட ஈடா என வாய் பிளப்பவர்களுக்கு ஆண்டன் பதில் இது தான், அதாவது ‘நாய்க்கடியால் நான் பட்ட வேதனை, பாதிப்பு போன்ற கஷ்டங்களை பணத்தால் அளவிட முடியாது. எனவே தான் நான் இவ்வளவு நஷ்ட ஈடு கேட்டு இருக்கிறேன்' என்கிறார்.
ஆதாரத்துக்காக நாய் கடித்ததில் தனது விரலில் இருந்து ரத்தம் வடிந்த காட்சியுடன் கூடிய போட்டோவையும் மனுவுடன் இணைத்துள்ளார் ஆண்டன்.
கடைசியா ஒண்ணு சொல்ல மறந்துட்டமே, ஆண்டன் கேட்டிருக்குற நஷ்டஈடு எவ்ளோ தேரியுமா....?
2,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 டாலர் தான். அதாவது தான் சிகிச்சைப் பெற்ற மருத்துவமனைகளின் எண்ணிக்கையான இரண்டுக்குப் பின்னால் சும்மா 36 பூஜ்ஜியங்களை அடுக்கியுள்ளார் ஆண்டன்.
நாய் கடிக்க வேணாம்... இதப்பார்த்தாலே நமக்கு பதறுதே